‘டாடி’ஆறுமுகத்தின் மகனை பிடிக்க போலீஸ் மெத்தனம் ஏன்?
வித்தியாசமான அசைவ உணவு சமையல் முறையினால் பிரபலமானவர் டாடி ஆறுமுகம். யூடியூப் சேனல் மூலம் புகழ் மட்டுமல்லாது செல்வத்திலும் உச்சத்திற்கு சென்றவர். இவரது மகன் அளவுக்கு அதிகமாக குடித்து விட்டு மதுபாறை சூறையாடி ரகளையில் ஈடுபட்ட வீடியோ வைரலாகி வருகிறது. தலைமறைவாக இருக்கும் அவரை பிடிக்க தனிப்படையினர் தேடிவருகின்றனர்.
ஏழ்மை நிலையில் இருந்த ஆறுமுகம் தனது மகன் கொடுத்த யோசனையின் பேரில் யதார்த்தமாக வில்லே புட் பேக்டரி என்ற யூடியூப் சேனல் தொடங்கி, அதில் அசைவை உணவு சமைக்கும் வீடியோவை பதிவிட, வித்தியாசமான அந்த முறையினால் அந்த ஒரு வீடியோவே பல லட்சங்களை அவருக்கு சம்பாதித்து கொடுத்தது. அதன்பின்னர் அவர் தொடர்ந்து வீடியோவை பதிவிட ஒவ்வொரு வீடியோவும் பல மில்லியன் பார்வையாளர்களை கடந்து செல்கின்றன. இதனால் புகழும் செல்வமும் அதிகம் வந்து சேர்ந்துள்ளன.
பல்வேறு விருதுகளையும் வாங்கி குவித்திருக்கும் டாடி ஆறுமுகம் புதுச்சேரியில் காமராஜர் சாலை இந்திரா சிக்னல் ஏரியாவில் டாடி ஆறுமுகம் பிரியாணி என்ற ஓட்டலை நடத்தி வருகிறார். தேனி மாவட்டம் கம்பம் பகுதியை சேர்ந்த ஆறுமுகம் மதுரை உள்ளிட்ட பல்வேறு ஒடங்களில் அசைவ ஓட்டல்கள் ஓட்டல் நடத்தி வருகிறார்.
ஆறுமுகத்தின் மகன் கோபிநாத்(33)இந்த ஓட்டலை கவனித்து வந்துள்ளார். இந்த ஓட்டலில் ஜெயராம்(25), ராஜேஷ்(25), மோகன்(28), தாமு(32) ஆகியோர் வேலை செய்துவந்தனர். இவர்கள் 5 பேரும் கடந்த 21ம் தேதி அன்று இரவு ஏகே டார்வின் ஓட்டலுக்கு சென்றுஅங்கிருக்கும் மதுபாரில் மது அருந்தி இருக்கிறார்கள்.
போதையில் குத்தாட்டம் போட்டு ரகளையில் ஈடுபட்டுள்ளனர். பார் ஊழியர்களை மரியாதை இல்லாமல் பேசி இருக்கிறார்கள். இரவு 11 மணிக்கு மேல் பார் மூட விடாமல் குடித்துக்கொண்டே ரகளை செய்திருக்கிறார்கள்.
பீர் பாட்டில்களை அடித்து உடைத்து வீசியதில் ஊழியர் ஒருவருக்கு பலத்த காயம் ஏற்பட்டிருக்கிறது. இதையடுத்து அவர் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டிருக்கிறார்.
இதையடுத்து முத்தியால் பேட்டை போலீசுக்கு தகவல் சொல்ல, ஐந்து பேரும் வெளியேறி இருக்கிறார்கள். வெளியே வந்து போதையில் நடக்க முடியாமல் தள்ளாடிக்கொண்டே அலப்பறை கொடுத்திருக்கிறார்கள். அப்போது முத்தியால் பேட்டை ஏட்டு மோகன் வந்து, ஏன் இப்படி ரகளை செய்கிறீர்கள் என்று கேட்க, ஓசியில் பிரியாணி வாங்கித்தின்னும் நீ எப்படி கேட்கலாம்? என்று கேட்டு, ஆபாச வார்த்தைகளால் திட்டி இருக்கிறார்கள். இதை எல்லாம் சிலர் வீடியோவாக எடுத்து வலைத்தளங்களில் வெளியிட அது வைரலாகி வருகிறது.
மற்ற போலீசார் வருவதற்குள் 5 பேர் எஸ்கேப் ஆகி இருக்கிறார்கள். ஐந்து பேர் மீதும் வழக்குபதிவு செய்த முத்தியால் பேட்டை மூன்று பேரை கைது செய்விட்டனர். ஆறுமுகத்தின் மகன் உள்ளிட்ட 2 பேரை பிடிக்க தனிப்படை போலீசார் தேடி வருகின்றனர். ஆனாலும் ‘டாடி’ஆறுமுகத்தின் மகனை பிடிக்க போலீஸ் மெத்தனம் ஏன்? என்று ஓட்டல் நிர்வாகம் கேள்வி எழுப்புகிறது.