நடிகை பலாத்கார வழக்கில் நடிகர் வீட்டில் அதிரடி சோதனை
நடிகை பாவனா வழக்கினை அடுத்த மாதத்திற்குள் முடிக்க வேண்டிய நெருக்கடி இருக்கும் நிலையில், நடிகர் திலீப் வீட்டில் அதிரடி சோதனை நடத்தி இருக்கிறார்கள் கேரள குற்றப்பிரிவு போலீசார். திலீப் வீடு மற்றும் அலுவலகங்களில் சோதனை நடந்திருக்கிறது. திலீப்பின் சகோதரி வீட்டிலும் சோதனை நடந்திருக்கிறது. காவல் கண்காணிப்பாளர் மோகன சந்திரன் தலைமையில் இந்த சோதனை நடைபெற்று உள்ளது.
நடிகை பாவனா கடந்த 2017ஆம் ஆண்டில் கேரளாவில் நள்ளிரவில் கடத்தப்பட்டார். இந்த வழக்கின் பின்னணியில் இருந்ததாக நடிகர் திலீப் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு இருந்தார். பின்னர் அவர் ஜாமீனில் வந்திருக்கிறார். இதுகுறித்த வழக்கு எர்ணாகுளம் சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. 2017ம் ஆண்டின் பிப்ரவரி மாதத்தில் நடந்த சம்பவத்தில் 2022 பிப்ரவரி மாதத்திற்குள் இந்த வழக்கின் விசாரணையை முடிக்க வேண்டும் என்று எர்ணாகுளம் சிறப்பு நீதிமன்றத்திற்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது.
நடிகை பாவனா பாலியல் வன்கொடுமைக்கு ஆளானபோது, போட்டோக்கள் எடுக்கப்பட்டது என்றும், அது திலீப்பிடம் இருக்கிறது என்றும், அவர் உள்பட பலரும் அந்த படங்களை பார்த்திருக்கிறார்கள். அது தனக்கு தெரியும் என்றும் திலீப்பின் நண்பரும் இயக்குனருமான பாலசந்திரகுமார் அண்மையில் வெளிப்படையாக மீடியாக்களிடம் பேட்டியளித்திருந்தார் .
பாலசந்திரகுமார் இந்த புகார் குறித்து விசாரணை நடத்த வேண்டும் என பாதிக்கப்பட்ட நடிகை பாவனா கேரள முதல்வர் பினராயி விஜயனிடம் புகார் அளித்திருந்தார். இந்த வழக்கில் மீண்டும் விசாரணை நடத்த அனுமதிக்க வேண்டும் என்று கூறி போலீஸ் தரப்பிலும் விசாரணை நீதிமன்றத்தில் அனுமதி கோரப்பட்டது. இந்த வழக்கு தொடர்பாக திலீப்புக்கு மீண்டும் சிக்கல் ஏற்பட்டிருக்கிறது.
நடிகர் திலீப் கேரள டிஜிபி அணில் காந்தியிடம் புகார் அளித்திருக்கிறார். அந்த புகாரில் நடிகை பாவனா பலாத்கார வழக்கில் என்னை சிக்க வைக்க போலீஸ் முயற்சி செய்கிறது. பாலச்சந்திரகுமார் கூறியதாக வெளியான தகவலின் பின்னணியில் போலீசார் தான் இருக்கிறார்கள். இதன்மூலம் எனக்கு எதிராக சதி வேலை செய்வதாக சந்தேகம் இருக்கிறது என்கிறார். இந்த வழக்கு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது பாலச்சந்திர குமாரின் புகார் தொடர்பாக நடிகர் திலீப்பிடம் விசாரணை நடத்தி அறிக்கையை வரும் ஜனவரி 20ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது.
இந்த நிலையில், திலீப்பின் வீடு மற்றும் அலுவலகங்களில் சோதனை நடந்திருக்கிறது. திலீப்பின் சகோதரி வீட்டிலும் சோதனை நடந்திருக்கிறது. காவல் கண்காணிப்பாளர் மோகன சந்திரன் தலைமையில் இந்த சோதனை நடைபெற்று உள்ளது. நீதிமன்றத்தின் அனுமதியை பெற்ற பின்னரே இந்த சோதனையை நடத்தியிருக்கின்றனர். குற்றப்பிரிவு போலீசார் சோதனைக்குப் பின்னர் திலீப் வீடு மற்றும் அலுவலகங்களிலும், அவரது சகோதரி வீட்டில் கைப்பற்றப்பட்ட பொருட்கள் ஆவணங்கள் குறித்த தகவல்களை எதையும் குற்றப்பிரிவு போலீசார் வெளியிடவில்லை.