தேனியில் கோயில் உண்டியலை உடைத்து பணம் கொள்ளை!
தேனி
தேனி அருகே நள்ளிரவில் கோயில் உண்டியலை உடைத்து மர்மநபர்கள் பணத்தை திருடிச்சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தேனி மாவட்டம் போடி நாயக்கனூர் வட்டம் பூதிப்புரம் கிராமத்தில் பழமையான வரதராஜ பெருமாள் ஆலயம் உள்ளது. இங்கு நேற்றிரவு பூஜைகள் முடிந்து, அர்ச்சகர் கோயிலை பூட்டிவிட்டுச் சென்றுள்ளார். இன்று காலை மீண்டும் கோயிலை திறக்க சென்றபோது, கோயில் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இதனை அடுத்து, உள்ளே சென்று பார்த்தபோது கோயில் உண்டியல் உடைக்கப்பட்டு அதனுள் இருந்த காணிக்கை பணம் கொள்ளையடிக்கப்பட்டது தெரிய வந்தது. இதுகுறித்து கோயில் நிர்வாகத்தினர் பழனிசெட்டிப்பட்டி காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தனர்.
தகவலின் பேரில் போலீசார் சம்பவம் இடத்திற்கு நேரில் சென்று விசாரணை மேற்கொண்டனர். அப்போது, உண்டியலில் இருந்து சுமார் 10 ஆயிரம் ரூபாய் பணம் திருடுபோனது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.