எல்ஐசி உதவி மேலாளர் வீட்டில் 19 சவரன் நகைகள் கொள்ளை!
மதுரை
மதுரையில் பட்டப்பகலில் எல்.ஐ.சி உதவி மேலாளர் வீட்டின் பூட்டை உடைத்து, மர்மநபர்கள் 19 சவரன் தங்க நகைகளை திருடிச்சென்றனர்.
மதுரை மாவட்டம் அவனியாபுரம் மண்டேலாநகர் நாகப்பாநகரை சேர்ந்தவர் பாண்டிவேல்(41). இவர் விருதுநகர் மாவட்டம் அருப்புகோட்டை எல்.ஐ.சி அலுவலகத்தில் உதவி மேலாளராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு மாலதி என்ற மனைவியும், இரு குழந்தைகளும் உள்ளனர்.
பாண்டிவேல் நேற்று பணிக்கு சென்ற நிலையில், மாலதி குழந்தைகளுடன் துக்க நிகழ்ச்சிக்கு புறப்பட்டு சென்றார். பிற்பகல் வீட்டிற்கு திரும்பியபோது பூட்டு உடைக்கப்பட்டு வீடு திறந்து கிடந்தது. இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர், உள்ளே சென்று பார்த்தபோது பீரோவை உடைத்து அதில் இருந்த 19 சவரன் தங்க நகைகளை மர்மநபர்கள் திருடிச்சென்றது தெரியவந்தது.
இந்த சம்பவம் குறித்து பாண்டிவேல் அளித்த தகவலின் பேரில் போலீசார் கொள்ளை நடந்த வீட்டை நேரில் பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டார். தொடர்ந்து புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து, மர்மநபர்களை தேடி வருகின்றனர்.