காதலன் திருமணத்தை நிறுத்த இளம்பெண் செய்த காரியம் - அதிர்ச்சியில் உறைந்த அரசு மருத்துவமனை
தன்னை கழட்டிவிட்டு வேறொரு பெண்ணை திருமணம் செய்து கொள்ளப்போகும் காதலனை மிரட்டுவதற்காக யாருக்கோ பிறந்த குழந்தையை கடத்தி பின்னர் சிசிடிவி பதிவுகள் மூலம் சிக்கியிருக்கிறார் இளம்பெண். கேரள மாநிலத்தில் நடந்து இருக்கிறது இப்படி ஒரு சம்பவம் .
வலியத்தாரா பகுதியில் வசித்து வருபவர் ஸ்ரீஜித். இவரது மனைவி அஸ்வதி கர்ப்பமாக இருந்ததால் கடந்த 3 நாட்களுக்கு முன்பாக கோட்டயத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருக்கிறார் . அங்கு அவருக்கு குழந்தை பிறந்திருக்கிறது. குழந்தை பிறந்ததும் அங்கு வந்த செவிலியர் ஒருவர் குழந்தையை பரிசோதிக்க வேண்டும் என்று சொல்லிச் சென்றிருக்கிறார் .
நீண்ட நேரம் ஆன பின்னரும் குழந்தையை திருப்பிக் கொண்டு வராததால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் மருத்துவமனை நிர்வாகிகளிடம் புகார் கூறியிருக்கிறார்கள். அதன்பின்னர்தான் குழந்தை கடத்தப்பட்ட விவரம் தெரிய வந்திருக்கிறது. செவிலியர் போல் வந்து குழந்தையை கடத்திக் கொண்டு சென்றது தெரிய வந்திருக்கிறது.
இதையடுத்து போலீசில் புகார் கொடுக்க அவர்கள் மருத்துவமனையில் இருந்த சிசிடிவி காட்சிகளை வைத்து ஆய்வு செய்தபோது , நீத் ராஜ் என்கிற இளம்பெண் கைது செய்யப்பட்டிருக்கிறார்.
போலீஸ் விசாரணையில், தான் இப்ராகிம் என்பவரை காதலித்து வந்ததாகவும் திருமணம் செய்து கொள்வதாக சொல்லி விட்டு இப்ராஹிம் தன்னிடம் 30 லட்சம் ரூபாய் வரைக்கும் பணம் பெற்றுக் கொண்டார் என்றும், தனது காதலை முறித்துக்கொண்டு வேறொரு பெண்ணை திருமணம் செய்ய முடிவு செய்து இருக்கிறார். இதை தெரிந்துகொண்ட தான் காதலனை பழிவாங்க வேண்டும் என்ற நோக்கத்தில் பிறந்த குழந்தையை கடத்திச் சென்று அது தனக்கும் இப்ராகிமுக்கும் பிறந்த குழந்தை என்று சொல்லி காதலனை பழிவாங்க வேண்டும் என்பதற்காக குழந்தையை கடத்தியதாக சொல்லியிருக்கிறார்.
யாரோ ஒருத்தருக்கு பிறந்த குழந்தையை கடத்தி சென்று காதலனை மிரட்ட திட்டமிட்ட இளம் பெண்ணின் செயலால் கோட்டயம் அரசு மருத்துவமனை வட்டாரம் அதிர்ச்சியில் உறைந்திருக்கிறது.