பாலினத்தை அறிய திருநங்கைகளின் ஆடைகளை களைந்த போலீசார்
திருநங்கைகளின் ஆடைகளை களைந்து அவர்களை அவமானப்படுத்திய போலீசாரின் செயல் திரிபுரா மாநிலத்தில் பெரும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி இருக்கிறது.
திரிபுரா மாநிலத்தில் அகர்தலா பகுதியைச் சேர்ந்த நான்கு திருநங்கைகள் அப்பகுதியில் நடந்த விருந்து ஒன்றில் கலந்துகொண்டு விட்டு இரவு வீடு திரும்பிக் கொண்டிருந்திருக்கிறார்கள். அப்போது பாதுகாப்பு பணியில் இருந்த பெண் போலீசார், பொதுமக்களை மிரட்டி பணம் பறிப்பதாக இந்த நான்கு திருநங்கைகளையும் கைது செய்து மேற்கு அகர்தலா மகளிர் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றிருக்கிறார்கள்.
அந்த நான்கு பேரிடமும் காவல் நிலையத்தில் வைத்து விசாரணை நடத்திய போலீசார், உங்களின் பாலினத்தை அறிய வேண்டும் எனச் சொல்லி ஆடைகளை களையும் படி சொல்லியிருக்கிறார்கள். இதற்கு திருநங்கைகள் மறுப்பு தெரிவிக்க, அவர்களை மிரட்டி கட்டாயப்படுத்தி ஆடைகளை வலுக்கட்டாயமாக களையச் செய்திருக்கிறார்கள்.
பின்னர் அந்த நான்கு திருநங்கைகளின் செயற்கை முடியை களைந்து சோதனை செய்திருக்கிறார்கள். அதோடு விடாமல் கிராஸ் டிரஸ் அணிந்து கொண்டு நகரில் சுற்ற மாட்டோம் என கட்டாயப்படுத்தி எழுதி வாங்கியிருக்கிறார்கள். எந்த ஆதாரமும் இல்லாமல் மிரட்டி பணம் பறித்ததாக தங்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக பாதிக்கப்பட்ட திருநங்கைகள் தெரிவித்திருக்கிறார்கள்.
இதை அடுத்து சமூக ஆர்வலர்கள் உதவியோடு அந்த போலீசார் மீது புகார் அளிக்கப்பட்டு இருக்கிறது. திருநங்கைகளிடம் போலீசார் நடந்து கொண்ட விதம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கும் நிலையில் பல்வேறு தரப்பினரும் இந்த சம்பவத்திற்கு தங்களது கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.