பொங்கல் திருநாள்… சூரியனை வழிபடுவது எப்படி!

 

பொங்கல் திருநாள்… சூரியனை வழிபடுவது எப்படி!

உழவர் திருநாளாம் பொங்கல் திருநாள் கொண்டாட்டம் தொடங்கிவிட்டது. பொங்கலுக்கு முதல் நாள் பழையன கழிதலும் புதியன புகுதலும் என்பதற்கு ஏற்ப தமிழகம் முழுக்க போகி பண்டிகை சிறப்பாக கொண்டாடப்பட்டது.

நாளை பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில், புது பானை, பச்சரிசி, வெள்ளம், கரும்பு. மஞ்சள் கிழங்குடன் கூடிய செடி உள்ளிட்டவை விற்பனை சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது.

பொங்கல் திருநாள்… சூரியனை வழிபடுவது எப்படி!

பொங்கல் வைக்க சிறந்த நேரம் என்ன என்பது பற்றி கட்டுரை வெளியிட்டிருந்தோம். பொங்கல் பண்டிகையின் போது செய்ய வேண்டியவை பற்றி இப்போது காணலாம்.

பொங்கல் பண்டிகையையொட்டி அதிகாலை எழுந்து நீராட வேண்டும். தீபாவளி பண்டிகையைப் போல எண்ணெய் தேய்த்துக் குளிக்க வேண்டும் என்பது போன்று எந்த ஐதீகமும் இல்லை. காலையில் குளித்து முடித்து குறித்து கொடுக்கப்பட்டுள்ள நேரத்தில் பொங்கல் வைக்க வேண்டும்.

கிராமங்களில் பொங்கல் வைக்க உள்ள இடத்தை பசு சானத்தால் மொழுகி தூய்மை செய்து, கோலம் இட்டு தயார் செய்வார்கள். நகரத்தில் அதற்கு வாய்ப்பில்லை. எனவே, முடிந்தவர்கள் பசு சாணத்தால் மொழுகலாம். மற்றவர்கள், பொங்கல் வைக்க உள்ள இடத்தை நன்கு கழுவி சுத்தம் செய்து, மாக்கோலம் இட்டு அலங்கரிக்கலாம்.

பானையின் மீது வாங்கி வந்த மஞ்சள் இலையைக் கட்ட வேண்டும். புதுப் பானை மீது நாமே வர்ணம் தீட்டி அழகுபடுத்தலாம்.

சூரியன் உதிக்கும் கிழக்கு முகமாக பொங்கல் பானை வைத்து பொங்கல் செய்ய வேண்டும்.  பானையில் முதலில் பாலும், தண்ணீரும் இட்டு தயாராக வைக்க வேண்டும். கற்பூரம் கொண்டு பொங்கல் பானைக்கு ஆரத்தி எடுத்து அதைக் கொண்டு அடுப்பைப் பற்ற வைக்க வேண்டும். இஷ்ட தெய்வத்தை வணங்கியபடி பானையை அடுப்பில் வைக்க வேண்டும். 

பிறகு, பச்சரிசி, வெள்ளம் உள்ளிட்டவற்றைப் போட்டு பொங்கல் வைக்க வேண்டும். பொங்கல் பொங்கி வரும் போது பொங்கலோ பொங்கல் என்று கூறி சூரியனை வழிபடுவது நல்லது.

பொங்கல் சமைத்ததும் தலைவாழை இலையில் இட்டு, அதனுடன் கரும்பு, பழம் உள்ளிட்டவற்றை வைத்து சூரியனுக்குப் படைத்து வழிபாடு செய்ய வேண்டும். இந்த நேரத்தில், சூரியனை வழிபட 108 போற்றி மந்திரத்தை சொல்லலாம்.

கச்சபேச்வரர் கோவிலில் உள்ள சூரியன் சன்னிதியில் பொறிக்கப்பட்டிருக்கும் மயூர சதகத்தில் உள்ள நூறு ஸ்லோகத்தைச் சொல்லலாம்.

அல்லது, கீழ்க் காணும் தமிழ் மந்திரத்தைச் சொல்லலாம்…

சீலமாய் வாழ சீரருள் புரியும்

ஞாலம் போற்றும் ஞாயிறே போற்றி

சூரியா போற்றி சுந்தரா போற்றி

வீரியா போற்றி வினைகள் களைவாய்.

தை பிறந்தால் வழி பிறக்கும் என்று சொல்வார்கள்… எல்லோருக்கும் இந்த தைப் பொங்கல் சிறப்பான தொடக்கமாக அமைய வாழ்த்துகிறோம்!