×

40 வயதைக் கடந்தவர்கள் கவனம் செலுத்த வேண்டிய 5 விஷயங்கள்!

ஒவ்வொரு நாளுமே நமக்கு முக்கியமானதுதான். தினமும் வருங்காலத்திற்கான சேமிப்பாக சில ஆரோக்கியமான பழக்கங்களை மேற்கொள்ள வேண்டியது அவசியம். அதிலும் 40 வயதைத் தொட்டவர்கள் கூடுதல் கவனத்தோடு தங்கள் உடல்நிலை, மனநிலையைப் பராமரிக்க வேண்டியது அவசியம். ஏன் இந்த 40 வயது கணக்கு என்று கேள்வி எழலாம். இதுவரையிலான வயதில் சம்பாதிக்கவும், வெவேறு விஷயங்களுக்காகவும் ஓடிக்கொண்டே உடல் மீது அக்கறை செலுத்தாமல் இருந்திருக்கலாம். இப்போதுதான் நிதானிக்க வேண்டிய வயது. குழந்தைகள் சற்றே வளர்ந்திருப்பார்கள். தலை முடி நரைப்பதில் வேகம்
 

ஒவ்வொரு நாளுமே நமக்கு முக்கியமானதுதான். தினமும் வருங்காலத்திற்கான சேமிப்பாக சில ஆரோக்கியமான பழக்கங்களை மேற்கொள்ள வேண்டியது அவசியம்.

அதிலும் 40 வயதைத் தொட்டவர்கள் கூடுதல் கவனத்தோடு தங்கள் உடல்நிலை, மனநிலையைப் பராமரிக்க வேண்டியது அவசியம். ஏன் இந்த 40 வயது கணக்கு என்று கேள்வி எழலாம். இதுவரையிலான வயதில் சம்பாதிக்கவும், வெவேறு விஷயங்களுக்காகவும் ஓடிக்கொண்டே உடல் மீது அக்கறை செலுத்தாமல் இருந்திருக்கலாம்.

இப்போதுதான் நிதானிக்க வேண்டிய வயது. குழந்தைகள் சற்றே வளர்ந்திருப்பார்கள். தலை முடி நரைப்பதில் வேகம் காட்டும். உணவு தொடங்கி நடப்பது வரை லேசாக மாற்றம் வந்திருப்பதாக உணரும் வயது. எனவே, 40 வயதைக் கடந்தவர்கள் அவசியம் கவனிக்க வேண்டிய 5 விஷயங்களைப் பார்ப்போம்.

  1. வேலை, விளையாட்டு, பயணம் என ஏராளமான உழைப்பை உங்கள் உடல் செலுத்தியிருக்கிறது. குறிப்பாக, கால்கள். அதன் மூட்டுகள் அதிகம் உழைத்திருக்கும். எனவே, மூட்டுவலி, கழுத்துவலி போன்ற பிரச்னைகள் ஏற்படத் தொடங்கும். குறிப்பாக பெண்களுக்கு விரைவில் தொடங்கிவிடும். எனவே, அதற்கு உரிய உடற்பயிற்சி, உணவு முறை மாற்றத்தைக் கடைப்பிடிக்க வேண்டியது அவசியம்.
  2. இப்போது குழந்தைகள் வளர்ந்திருப்பார்கள். சிலருக்கு 10 – 13 வயதுக்கு குழந்தைகள் இருப்பார்கள். படிப்பிலும் சரி, நல்ல பழக்கங்களை பழகிக்கொள்வதிலும் சரி இவர்களின் மிக முக்கியக் காலக்கட்டம் இது. அவர்களுக்கான நேரம் ஒதுக்க இதுவரை முயன்றது இல்லை என்றாலும் இனியாவது ஒதுக்குங்கள். குழந்தைகளோடு சேர்ந்து வாக்கிங் செல்லுங்கள். குழந்தைகள் நண்பர்களாகும் காலம் இது. எனவே அதற்கான அடித்தளத்தை அமையுங்கள்.
  3. உடல் பருமனைக் கட்டுக்குள் வைக்க வேண்டியது அவசியம். பி.எம்.ஐ செக் செய்யுங்கள். 30 யைக் கடந்து காட்டினால் எச்சரிக்கையோடு இருங்கள். உடற்பயிற்சி, யோகா, உணவுப் பழக்கம் உள்ளிட்டவற்றில் மாற்றம் கொண்டு வந்து உடல்பருமனை இயல்புக்கு கொண்டு வாருங்கள். அதிக உடல்பருமன் சார்ந்த பிரச்னைகளை தொடக்கத்திலேயே சரி செய்ய வேண்டிய வயது இது.
  4. வேலை வேலை என ஓடிக்கொண்டிருந்து நடைபயிற்சி மேற்கொள்ளாதவர் எனில், அதை இன்றோடு மூட்டைக் கட்டி வைத்துவிடுங்கள். நாளை காலை முதலே நடைபயிற்சி செல்லும் முடிவை உடனே எடுங்கள். உடல் ஆரோக்கியத்திற்கு மிக எளிதாகச் செய்வது நடைபயிற்சிதான். அதையும் தவிர்ப்பது நல்லதல்ல.தனியாகச் செல்வதில் சிக்கல் அல்லது சோர்வு எனில், இதற்கு என்றே பல குரூப்கள் இருக்கின்றன. அவற்றில் சேர்ந்துகொண்டு புதிய நண்பர்களைப் பெறுங்கள். அவர்களோடு சேர்ந்து புதிய கதைகள் பேசியவாறே நடைபயிற்சி மேற்கொள்ளுங்கள்.
  5. குடும்பத்தினருக்கு மரபு சார்ந்த சில நோய்கள் இருக்கலாம். உங்கள் குடும்பத்தினருக்கு அப்படி இருக்கும்பட்சத்தில் ஒரு குறிப்பிட்ட இடைவெளியில் மருத்துவப் பரிசோதனை செய்வதைக் கட்டாயம் ஆக்குங்கள். இதற்கு முன் எப்போது சென்றோம், இனி எப்போது செல்ல வேண்டும் என்பதை டைரியில் குறித்து வையுங்கள். அடுத்த பரிசோதனை தேதிக்கு இரண்டு நாள்களுக்கு முன் நினைவூட்ட மொபைலில் ரிமைண்டர் செட் பண்ணிக்கொள்ளுங்கள்.40 வயதைக் கடந்தவர்களுக்கு 400 விஷயங்கள் கூடச் சொல்லலாம். இவை அடிப்படையான விஷயங்கள்தாம். இதிலும் சேமிப்பு, நிதி முதலீடு, இன்சூரன்ஸ் உள்ளிட்டவை சேர்க்கலாம்.இந்த ஐந்தைக் கடைபிடியுங்கள். அடுத்தடுத்த யோசனைகள் உங்களுக்கே பிடிபடும். அப்பறம் பார்த்துக்கொள்ளலாம் என நினைத்தால், பிறகு சிரமம்தான்.

அதற்காக உலகமே இதற்குப் பிறகு வேறா… என்று கவலையும் பயமும் கொள்ள வேண்டியதில்லை. சற்று கவனமாக இருக்கப்போகிறீர்கள் அவ்வளவுதான். உங்கள் வேலையில் பதவி உயர்வு கிடைத்தால் கூடுதல் பொறுப்போடு நடந்துகொள்வீர்கள் அல்லவா… அதுபோலத்தான்.