“இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புக்கேற்ற பயிற்சி அளிக்க மத்திய அரசு நடவடிக்கை” : பிரதமர் மோடி
வேலைவாய்ப்புக்கேற்ற திறனை இளைஞர்கள் வளர்த்துக்கொள்வது அவசியம் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
உலக இளைஞர் திறன் தினம் இன்று கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் மோடி காணொளி காட்சி மூலம் தனது வாழ்த்துகளை தெரிவித்து கொண்டார். இதுகுறித்து பிரதமர் மோடி பேசும் போது, “அனைத்து இளைஞர்களுக்கும் எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.கொரோனா இடர்பாடு நாம் பணியாற்றும் நடைமுறைகளையே மாற்றி அமைத்திருக்கிறது. இளைஞர்கள் தங்களுக்கான வாய்ப்புகளை முழுமையாக பயன்படுத்த வேண்டும்.
வேலைவாய்ப்புக்கேற்ற திறனை இளைஞர்கள் வளர்த்துக்கொள்வது அவசியம். இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புக்கேற்ற பயிற்சி அளிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்கப்படும். பணம் சம்பாதிக்க மட்டுமே திறமையை பயன்படுத்தக்கூடாது. திறமை என்பது வெறும் பணம் சம்பாதிப்பதற்கான வழி மட்டுமல்ல; அது உற்சாகம் அளிக்கக்கூடியதும் கூட. ஒரு திறமையான நபர் தனது வாய்ப்புகளை எந்த வகையிலும் விட்டுவிடக்கூடாது” என்றார்.