சாலையோரம் நின்ற லாரி மீது பைக் மோதல் – 4 பேர் பலி!
திருப்பூர்
அவினாசி அருகே நேற்றிரவு சாலையோரம் நின்ற லாரி மீது இருசக்கர வாகனம் மோதிய விபத்தில் 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
திருப்பூர் மாவட்டம் அவினாசி அருகே உள்ள பூலுவபட்டி பகுதியை சேர்ந்தவர் பாலமுருகன். அதே பகுதியை சேர்ந்தவர்கள் குட்டி, ஆனந்த் மற்றும் மற்றொரு பாலமுருகன். நண்பர்களான இவர்கள் நேற்றிரவு, ஒன்றாக மது அருந்தியுள்ளனர்.
பின்னர், 4 பேரும் ஒரே இருசக்கர வாகனத்தில் கோவை – சென்னை தேசிய நெடுஞ்சாலையில் அதிவேகமாக சென்றுள்ளனர். ஈட்டி வீரம்பாளையம் அருகே சென்றபோது வாகனத்தின் டயர் தீடீரென பஞ்சராகியுள்ளது.
இதில் கட்டுப்பாட்டை இழந்த இருசக்கர வாகனம், அங்கு சாலையோரம் நிறுத்தி வைத்திருந்த லாரியின் மீது அதிவேகமாக மோதியது. இதில் பாலமுருகன், குட்டி ஆகியோர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், ஆனந்த் மற்றும் மற்றொரு பாலமுருகன் ஆகியோர் படுகாயமடைந்தனர்.
விபத்து பகுதிக்கு விரைந்து சென்ற போலீசார் காயமடைந்த இவருரையும் மீட்டு அவினாசி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பிவைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி இருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.