பா.ம.க.வுக்கு ஆப்பிள் சின்னத்தில் ஓட்டு போடுங்க: மேடையில் உளறி கொட்டிய அமைச்சர்; கடுப்பான ராமதாஸ்
பாமக வேட்பாளரை ஆதரித்து பிரசாரத்தில் ஈடுபட்ட அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், ஆப்பிள் சின்னத்தில் வாக்கு கேட்டு அதிர்ச்சியில் ஆழ்த்தினார்.
திண்டுக்கல்: பா.ம.க வேட்பாளரை ஆதரித்து பிரசாரத்தில் ஈடுபட்ட அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், ஆப்பிள் சின்னத்தில் வாக்கு கேட்டு அதிர்ச்சியில் ஆழ்த்தினார்.
அனல் பறக்கும் பிரசாரம்
மக்களவை தேர்தல் வரும் ஏப்ரல் 18-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதற்கான பணியில் அரசியல் கட்சிகள் வேகம் காட்டி வருகிறது. இதனால் அதிமுக திமுக உள்ளிட்ட இதர கட்சிகள் தேர்தல் பணியில் மும்முரம் காட்டி வருகின்றனர். தேர்தல் பரப்புரையின் போது, வாக்குறுதிகள், அதிமுக- திமுக காரசார விவாதங்கள் அனைத்தையும் தாண்டி, சில சுவாரசியமான சம்பவங்களும் நடந்து வருகின்றன.
பா.ம.க.வுக்கு ஆதரவாக சீனிவாசன் பிரசாரம்
இந்நிலையில், மக்களவை தேர்தலில் பாமக வேட்பாளர் ஜோதிமுத்து திண்டுக்கல் தொகுதியில் போட்டியிடுகிறார். அதனால் இவரை ஆதரித்து அதிமுக அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், அதிமுக நிர்வாகி நத்தம் விஸ்வநாதன் மற்றும் பாமக நிறுவனர் ராமதாஸ் ஆகியோர் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.
ஆப்பிள் சின்னத்துக்கு ஓட்டு போடுங்க!
அப்போது வாக்கு சேகரிப்பின் ஒரு பகுதியாக நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய அமைச்சர் திண்டுக்கல் சி.சீனிவாசன், ஸ்டாலின் தற்போது பேசும் அனைத்து கூட்டத்திலும் உளறிக் கொட்டி வருகிறார். அதனால் அதிமுக கூட்டணி கட்சியான பாமகவின் ஆப்பிள் சின்னத்திற்கு வாக்களியுங்கள் என்றார். இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த பாமகவினர் ஆப்பிள் இல்லை மாம்பழம் என்று கூறினர்.
உளறிக்கொட்டிய அமைச்சர்
இதையடுத்து தன்னுடைய உளறலை எண்ணி தலையில் அடித்துக் கொண்டே சிரித்த அமைச்சர் சீனிவாசன், மாம்பழம் சின்னத்துக்கு ஓட்டுப் போடுங்கள் என்று கூறினார். இதைக் கேட்டு மேடையிலிருந்த கட்சி நிர்வாகிகளும் வேட்பாளரும் மற்றவர்களும் கொல்லென்று சிரித்தனர்.
அப்செட்டான ராமதாஸ்
முதுமையின் காரணமாக அமைச்சர் சீனிவாசனின் உளறலை, கண்டுகொள்ளாத ராமதாஸிடம் அதிமுக நிர்வாகி நத்தம் விஸ்வநாதனோ வான்டடாக காதில் கூற, ராமதாஸோ அதிமுக அமைச்சரான திண்டுக்கல் சீனிவாசனை வினோதமாகப் பார்த்தார்.
முன்னதாக அதிமுக வேட்பாளருக்கு ஆதரவாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட ராமதாஸ், அதிமுக திமுகவுக்கு ஓட்டு போடாதீங்க என்று கூறியது சர்ச்சையாக மாறியது. ஒருவேளை இதுதான் பழிக்கு பழியா?
இதையும் வாசிக்க: #DuraiMurugan நெருங்கி வரும் தேர்தல்: துரைமுருகன் வீட்டில் வருமானவரி சோதனை: மத்திய மாநில அரசுகளின் சதியா?