தேர்தல் ஆணையர்களை ஜெயிலில் போடுவோம்; அம்பேத்கர் பேரன் சர்ச்சை பேச்சு!
தேர்தல் ஆணையம் பொதுவாகச் செயல்படுகிறது என்று யாரும் எண்ண வேண்டாம். ஆளும் மத்திய பாஜக அரசுக்கு மட்டுமே ஆதரவாக மட்டுமே தேர்தல் ஆணையம் செயல்படுகிறது
மும்பை: நாங்கள் ஆட்சிக்கு வந்தால் தேர்தல் ஆணையர்களை சிறை வைப்போம் என அம்பேத்கரின் பேரன் பிரகாஷ் அம்பேத்கர் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
அம்பேத்கரின் பேரனான பிரகாஷ் அம்பேத்கரின் வஞ்சித் பகுஜன் அகாதி கட்சி, அம்பேத்கர் முன்னணி பரீப் பகுஜன் மகாசங் மற்றும் அசாதுதீன் ஓவைஸியின் ஏஐஎம்ஐஎம் கட்சிகள் இணைந்து மகாராஷ்டிரா மாநிலத்தில் 48 மக்களவை தொகுதியிலும் கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றன.
இதில் பிரகாஷ் அம்பேத்கர் சோலப்பூர் மற்றும் அகோலா ஆகிய இரு தொகுதிகளில் போட்டியிடுகிறார். தேர்தலை முன்னிட்டு, மகாராஷ்டிராவின் யமத்மாலில் நடந்த பிரசாரக் கூட்டத்தில் பிரகாஷ் அம்பேத்கர் கலந்து கொண்டு பேசுகையில், புல்வாமா தாக்குதலில் 40 வீரர்களை இழந்துள்ளோம். ஆனால் அமைதியாக இருக்க வேண்டுமாம். இந்த தாக்குதல் குறித்து பேசக்கூடாது என்கிறார்கள். தேர்தல் ஆணையம் எப்படி எங்களை இப்படி சொல்லலாம். சட்டப்படி இதைப்பற்றி பேச உரிமை உள்ளது.
நான் பாஜகவை சேர்ந்தவன் கிடையாது. ஒருவேளை நாங்கள் ஆட்சிக்கு வந்தால் தேர்தலை ஆணையர்களை இரண்டு நாளைக்கு சிறை வைப்போம். இந்த தேர்தல் ஆணையம் பொதுவாகச் செயல்படுகிறது என்று யாரும் எண்ண வேண்டாம். ஆளும் மத்திய பாஜக அரசுக்கு மட்டுமே ஆதரவாக மட்டுமே தேர்தல் ஆணையம் செயல்படுகிறது என்றார்.
சட்டமேதை அம்பேத்கரின் பேரனான பிரகாஷ் அம்பேத்கர் இவ்வாறு பேசியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியதையடுத்து, தான் ஒரு விஷயத்தை பொதுவாக சொன்னதாகவும் தேர்தல் ஆணையம் பற்றிய கருத்து மட்டும் மிகைப்படுத்தப்பட்டு விட்டதாகவும் பிரகாஷ் அம்பேத்கர் விளக்கம் அளித்துள்ளார்.
இதனிடையே, உள்ளூர் தேர்தல் அதிகாரிகளிடம் பிரகாஷ் அம்பேத்கரின் பேச்சு குறித்து அறிக்கை தாக்கல் செய்யும்படி தேர்தல் ஆணையம் கேட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் வாசிங்க