தமிழகத்தில் மறுவாக்குப்பதிவு: லிஸ்ட்டில் இடம்பெற்ற தருமபுரி, தேனி தொகுதிகள்!?
தமிழகத்தில் 13 வாக்குச் சாவடிகளில் மறுவாக்குப்பதிவு நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது
சென்னை: தமிழகத்தில் 13 வாக்குச் சாவடிகளில் மறுவாக்குப்பதிவு நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது
தமிழகம் உட்பட 13 மாநிலங்களில் கடந்த 18 ஆம் தேதி நாடாளுமன்ற தேர்தல் நடந்து முடிந்தது. தேர்தல் முடிவானது வரும் 23ஆம் தேதி வெளியாக உள்ளது. வாக்குப்பதிவு அமைதியான முறையில் நடைபெற்றாலும் சில இடங்களில் வாக்குப்பதிவு இயந்திரங்களில் கோளாறு மற்றும் குளறுபடிகள் நடந்ததாகப் புகார்கள் எழுந்தது.
இந்நிலையில், கோவையிலிருந்து நேற்று மாலை 50 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் தேனி வட்டாட்சியர் அலுவலகத்துக்குக் கொண்டு செல்லப்பட்டன. அதில் 10 பெட்டிகளிலிருந்த வாக்குப்பதிவு இயந்திரங்களைத் தேர்தல் நடத்தும் அலுவலர்கள் தனி அறையில் வைத்துப் பூட்டி சீல் வைத்தனர். இந்த விவகாரம் காட்டுத்தீ போலப் பரவ திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் பலர் அங்கு வந்து வாக்குப்பதிவு இயந்திரங்கள் குறித்து கேள்வி எழுப்பி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இதனிடையே ஏற்கனவே பாப்பிரெட்டிபட்டி, கடலூர், திருவள்ளூர், பூந்தமல்லி, கடலூர், தருமபுரி மாபட்டங்களில் உள்ள 10 வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவு நடத்த இந்திய தலைமை தேர்தல் ஆணையத்துக்குத் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாஹூ பரிந்துரைத்திருந்தார். அத்துடன் தேனி உள்பட 46 வாக்குச்சாவடிகளில் மறு வாக்குப்பதிவுக்கு உத்தரவு வர வாய்ப்புள்ளது. தேர்தல் ஆணையத்தின் முடிவை பொறுத்து அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
இந்நிலையில், தமிழகத்தில் 13 வாக்குச் சாவடிகளில் வரும் 19ம் தேதி மறுவாக்குப்பதிவு நடைபெறும் எனத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதன்படி, தருமபுரியில் 8 வாக்குச் சாவடிகளிலும், தேனியில் 2 வாக்குச் சாவடிகளிலும், திருவள்ளூர், கடலூர், ஈரோட்டில் 1 வாக்குச் சாவடியிலும் மறுவாக்குப்பதிவு நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.