சூடு பிடிக்கும் தேர்தல் களம்: டிசர்ட்டில் அழகிரி, ஆனாலும் ஸ்டாலினுடன் செல்பி எடுத்த இளைஞர்; வைரல் போட்டோ!
மதுரையில் முக அழகிரி புகைப்படம் போட்டுக் கொண்டு வந்த இளைஞர் ஒருவர் ஸ்டாலினுடன் செல்ஃபி எடுத்துக்கொண்ட புகைப்படம் சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.
மதுரை: மதுரையில் முக அழகிரி புகைப்படம் போட்டுக் கொண்டு வந்த இளைஞர் ஒருவர் ஸ்டாலினுடன் செல்ஃபி எடுத்துக்கொண்ட புகைப்படம் சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.
வாக்கு சேகரிப்பில் தீவிரம் வரும் கட்சிகள்
நாடாளுமன்ற மக்களவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில், திமுக – அதிமுக போன்ற பிரதான கட்சிகள்
வாக்கு சேகரிப்பில் தீவிரம் காட்டி வருகின்றனர். திமுக மற்றும் அதிமுகவில் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து முக ஸ்டாலினும், எடப்பாடி பழனிசாமியும் தீவிரமாக பிரச்சாரம் செய்து வருகின்றனர்.
மதுரையில் ஸ்டாலின் பரப்புரை
அந்த வகையில், திமுக கூட்டணி சார்பாக மதுரை மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளர் எழுத்தாளர் சு.வெங்கடேசனை ஆதரித்து, மாட்டுத்தாவணி மார்க்கெட் பகுதியில் நடந்து சென்று ஸ்டாலின் பரப்புரை மேற்கொண்டார்.அப்போது மாட்டுத்தாவணி மார்க்கெட்க்கு வந்திருந்த மக்களுடன் இயல்பாக பேசி மகிழ்ந்த ஸ்டாலின், அவர்களிடம் திமுக கூட்டணி வேட்பாளரான சு.வெங்கடேசனைக் காண்பித்து வாக்கு வேட்டையில் இறங்கினார். பின்பு அங்கிருந்த கடையில் தேநீர் அருந்தினார்.
டிசர்ட்டில் அழகிரி, செல்ஃபியில் ஸ்டாலின்
அப்போது அங்கு கூடிய ஏராளமான இளைஞர்களும், சிறுவர்களும் ஸ்டாலினுடன் செல்ஃபி எடுத்து மகிழ்ந்தனர். ஆனால் அதில் ஒரு செல்ஃபி மட்டும் வைரலாகி வருகிறது. அது மு.க.அழகிரியின் முகம் பொறிக்கப்பட்ட டிசர்ட் அணிந்திருந்த ஒரு இளைஞர் ஸ்டாலினுடன் செல்ஃபி எடுத்தது தான். இந்தப் புகைப்படமானது டிசர்ட்டில் அழகிரி, செல்ஃபியில் ஸ்டாலின் என்ற கேப்ஷனுடன் அதிகம் பகிரப்பட்டு வருகின்றது.
முன்னதாக முக அழகிரியை சந்தித்து ஆதரவு கோருவேன் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளர் எழுத்தாளர் சு.வெங்கடேசன் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் வாசிக்க: கணவனை கொன்ற மனைவி: கழிவுநீர் தொட்டியில் சடலத்தை மறைத்து நாடகமாடியது அம்பலம்!