சாமிதோப்பு அருகே குளத்தில் மூழ்கி இளைஞர் பலி!
கன்னியாகுமரி
கன்னியாகுமரி அருகே குளத்தில் குளித்தபோது நீரில் மூழ்கி இளைஞர் பரிதாபமாக உயிரிழந்தார்.
தூத்துக்குடி மாவட்டம் வேம்பார் அடுத்த ரோஜாபாளையத்தை சேர்ந்தவர் ஆரோக்கியராஜ் (45). இவரது மூத்த மகன் சுரேஷ்குமார் (20). இந்த நிலையில், ஆரோக்கியராஜ் நேர்த்திக் கடன் செலுத்துவதற்காக கன்னியாகுமரி மாவட்டம் சாமிதோப்பு பதிக்கு, நேற்று முன்தினம் குடும்பத்துடன் சென்றிருந்தார்.
தொடர்ந்து, நேற்று காலை சாமிதோப்பு அடுத்த செட்டிவிளை பகுதியில் உள்ள பூலாங்குளத்திற்கு குடும்பத்தினர் அனைவரும் குளிக்க சென்றனர். அப்போது, குளத்தில் முதலில் இறங்கிய சுரேஷ், நீச்சல் தெரியாததால் நீரில் தத்தளித்து உள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த உறவினர்கள், கூச்சலிட்டு அருகில் இருந்தவர்களை உதவிக்கு அழைத்தனர்.
இதனால், அந்த பகுதியை சேர்ந்த இளைஞர்கள் நீரில் இறங்கி மயங்கி நிலையில் இருந்த சுரேஷை மீட்டனர். இதனை அடுத்து, ஆம்புலன்ஸ் மூலம் கன்னியாகுமரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சுரேஷை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர்.
தகவல் அறிந்த தென்தாமரைகுளம் போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். சம்பவம் குறித்து ஆரோக்கியராஜ் புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.