கடலூர் அருகே மின்வேலியில் சிக்கி தொழிலாளி பலி!
கடலூர்
கடலூர் மாவட்டம் பெண்ணாடம் அருகே விவசாய நிலத்தில் அமைக்கப்பட்டிருந்த மின்வேலியில் சிக்கி இளைஞர் பரிதாபமாக உயிரிழந்தார்.
கடலூர் மாவட்டம் திட்டக்குடி அடுத்த பெண்ணாடம் பெலாந்துறை பகுதியை சேர்ந்தவர் கொளஞ்சி. இவரது மகன் பாலகுமார்(21). இவர் தனியார் செங்கல் சூளையில் தொழிலாளி ஆக பணிபுரிந்து வந்தார். நேற்று முன்தினம் காலை பாலகுமார் அங்குள்ள விவசாய தோட்டத்துக்கு இயற்கை உபாதையை கழிக்க சென்றார்.
அப்போது, தனியார் நிலத்தில் விலங்குகள் புகுவதை தடுக்க அமைக்கப்பட்டிருந்த மின்வேலியில் சிக்கி மின்சாரம் பாய்ந்ததில் சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார். இதனை அறிந்த தோட்ட உரிமையாளர்கள் உடனடியாக மின்வேலியை அகற்றி விட்டு அங்கிருந்து தப்பியோடினர். காலையில் பாலகுமார் சடலமாக கிடந்ததை பார்த்த அந்த பகுதி மக்கள் கருவேப்பிலங்குறிச்சி போலீசாருக்கு தகவல் அளித்தனர்.
தகவலின் பேரில் போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக விருதாச்சலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து, நிலத்தின் உரிமையாளரை தீவிரமாக தேடி வருகின்றனர்.