குழந்தை இல்லாத ஏக்கத்தில் இளைஞர் தூக்கிட்டு தற்கொலை!
திருச்சி
திருச்சியில் குழந்தை இல்லாத ஏக்கத்தில் இளைஞர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
திருச்சி மாநகராட்சிக்குட்பட்ட செந்தண்ணீர்புரம் அண்ணா தெருவை சேர்ந்தவர் அஜித்குமார். இவர் தள்ளுவண்டியில் வியாபாரம் செய்து வந்தார். இவருக்கு கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு வித்யா என்பவருடன் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு குழந்தை இல்லை.
இதனால், அஜித்குமார் மன உளைச்சலில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில், நேற்று வீட்டில் தனியாக இருந்த அவர், அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். வெளியே சென்றுவிட்டு வீட்டிற்கு வந்த உறவினர்கள், அஜித்குமார் தூக்கில் சடலமாக தொங்கியதை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
தொடர்ந்து, இதுகுறித்து அவர்கள் பொன்மலை காவல் நிலையத்துக்கு தகவல் அளித்தனர். அதன் பேரில், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் அஜித்குமாரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், தற்கொலை சம்பவம் குறித்து புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.