இருசக்கர வாகனத்தில் கஞ்சா கடத்திய இளைஞர் கைது!
சென்னை
சென்னை வளசரவாக்கம் பகுதியில் இருசக்கர வாகனத்தில் கஞ்சா விற்பனை செய்த இளைஞரை கைதுசெய்த போலீசார், அவரிடம் இருந்து 16 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். வளசரவாக்கம் பகுதிகளில் இரவு நேரங்களில் கஞ்சா சப்ளை செய்யப்படுவதாக வந்த தகவலை அடுத்து வளசரவாக்கம் போலீசார் தீவிரமாக கண்காணித்து வந்தனர். அப்போது ஆற்காடுசாலை வழியே சந்தேகத்திற்கிடமாக மோட்டார் சைக்கிளில் வந்த இளைஞரை போலீசார் மடக்கி சோதனை செய்தனர்.
அப்போது கஞ்சாவை வாகனத்தில் மறைத்து கடத்திவந்தது தெரியவந்தது. இதனையடுத்து, அவனை காவல்நிலையம் அழைத்துச் சென்று போலீசார் விசாரித்தனர். இதில், அவன் திருவள்ளூர் அடுத்த ஈக்காடு பகுதியை சேர்ந்த தினகரன்(22), என்பதும், கஞ்சாவை மொத்தமாக வாங்கி வந்து வளசரவாக்கம், வடபழனி உள்ளிட்ட பகுதிகளில் விற்பனை செய்தது தெரியவந்தது. இதனையடுத்து தினகரனை கைதுசெய்த போலீசார், அவனிரிடமிருந்து 16 கிலோ கஞ்சா, ரூ.62 ஆயிரம் பணம், 5 செல்போன்கள் மற்றும் ஒரு மோட்டார் சைக்கிள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.