ஃ பாரின் மாப்பிள்ளை கொண்ட பெண்கள் தான் டார்கெட்… கோடிக்கணக்கில் மோசடி… இளைஞரின் திடுக்கிடும் மோசடிகள்!
தொழிலதிபர் என ஏமாற்றி கோடிக்கணக்கில் மோசடி செய்த இளைஞர் பிடிபட்டுள்ளார். விசாரணையில் மேலும் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
துபாயில் மென்பொறியாளராக பணியாற்றியவர் உதயகுமார். இவர் சில மாதங்களுக்கு முன்பு சென்னை திரும்பியுள்ளார். தற்போது கொரோனா காரணமாக வெளிநாட்டில் இருந்து வருபவர்கள் தனிமைப்படுத்தப்படுவதால், உதயக்குமார் ஹோட்டல் ஒன்றில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.
வண்ணாரப்பேட்டையை சேர்ந்த விக்னேஷ் என்ற 23 வயது நபர் உதயகுமாருக்கு ஹோட்டலில் அறிமுகமாகியுள்ளார். உதயகுமாரிடம் விக்னேஷ் தான் குடிநீர் விற்பனை மற்றும் குடிநீர் சுத்திகரிப்பு உபகரணங்கள் விற்பனை செய்வதாகவும், அதில் பல கோடி ரூபாய் வருமானம் ஈட்டுவதாகவும் கூறியுள்ளார். பின்னர் உதயகுமார் வீட்டுக்கு அடிக்கடி விசிட் அடித்த விக்னேஷ், தன்னுடைய பிசினஸில் இணைந்தால் வரும் லாபத்தில் பங்கு தருவதாக உதயகுமாரிடம் கூறியுள்ளார். இதை நம்பிய உதயகுமார் 12 லட்சம் ரூபாய் வரை கொடுத்துள்ளார். பின்னர் விக்னேஷ் தலைமறைவாகியுள்ளார்.
ஏமாந்ததை அறிந்த உதயகுமார் வேளச்சேரி காவல் நிலையத்தில் புகாரளித்துள்ளார். பின்னர் போலீசார் தனிப்படை அமைத்து தலைமறைவாக இருந்த விக்னேஷை நேற்று முன் தினம் கைது செய்தனர். விக்னேஷிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
பத்தாம் வகுப்பு வரை மட்டுமே படித்துள்ள விக்னேஷ், ஆங்கிலம் சரளமாக பேசுவதால் பிபிஓ நிறுவனத்தில் வேலை கிடைத்துள்ளது. இவர், டிக்டாக்கில் அதிகளவில் வீடியோக்களை பதிவேற்றம் செய்துள்ளார். இதை பல பெண்கள் லைக் செய்துள்ளனர். அவ்வாறு தனது வீடியோவை லைக் செய்யும் பெண்களுடன் சாட்டிங் செய்வது இவரது வழக்கம். பின்னர் அந்தப் பெண்களிடம் போன் நம்பர் வாங்கி வந்துள்ளார்.
ஆங்கிலத்தில் சரளமாக பேசுவதாலும், தன்னை வசதியானவர் என கூறியதாலும் பல பெண்கள் இவரது வலையில் விழுந்தனர்.
குறிப்பாக, வெளிநாட்டில் வேலை செய்பவர்களின் மனைவிகள் தனியாக இருப்பது தெரிந்தால், அவர்களிடம் நல்லவன் போல் பழகி பல லட்சம் பணம் பறித்துள்ளான்.
சென்னை மட்டுமின்றி வேலூர், பெங்களூரு உள்ளிட்ட பல பகுதிகளில் உள்ள பெண்கள் இவனிடம் ஏமாந்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
பாதிக்கப்பட்ட சில திருமணமான பெண்கள் காவல்துறையினரைத் தொடர்பு கொண்டு, கணவருக்குத் தெரியாமல் பணத்தை கொடுத்தோம். அவருக்கு தெரிந்தால் குடும்பத்தில் பிரச்னை ஏற்பட்டு, வாழ்கை பாதிக்கப்படும் என்ற பயத்தில் புகார் கொடுக்க முன்வரவில்லை.” என்று கூறியுள்ளனர்.
கைது செய்யப்பட்ட விக்னேஷிடம் இருந்த 3 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. பின்பு அந்த இளைஞரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர். அடுத்த கட்ட விசாரணைகளில் இன்னும் பல தகவல்கள் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.