கோவை அருகே குடும்ப தகராறில் பெண் தூக்கிட்டு தற்கொலை!

 

கோவை அருகே குடும்ப தகராறில் பெண் தூக்கிட்டு தற்கொலை!

கோவை

கோவை அருகே குடும்ப தகராறில் பெண் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

கோவை மாவட்டம் காரமடை கண்ணார்பாளையம் சாலையில் உள்ள நேரு நகரை சேர்ந்தவர் வினோத்குமார். ஆம்புலன்ஸ் ஓட்டுநர். இவரது மனைவி ஷர்மிளா. இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர். கணவன், மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனால் ஷர்மிளா மனமுடைந்து காணப்பட்டு உள்ளார். இந்த நிலையில், நேற்று முன்தினம் மீண்டும் இருவருக்கும் தகராறு ஏற்பட்டு உள்ளது.

கோவை அருகே குடும்ப தகராறில் பெண் தூக்கிட்டு தற்கொலை!

பின்னர் இருவரும் தூங்க சென்ற நிலையில், காலையில் வினோத்குமார் வேலைக்கு புறப்பட்டு சென்று விட்டார். கணவர் உடனான தகராறில் விரக்தியடைந்த ஷர்மிளா வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். பணிமுடிந்து வினோத் வீட்டிற்கு திரும்பியபோது, ஷர்மிளா தூக்கில் சடலமாக தொங்கியதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். தகவல் அறிந்த காரமடை போலீசார் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தொடர்ந்து, போலீசார் வீட்டில் மேற்கொண்ட சோதனையில், தற்கொலை செய்வதற்கு முன்பாக ஷர்மிளா எழுதிய கடிதம் சிக்கியது. அந்த கடிதத்தில், குழந்தைகளை நன்றாக படிக்க வைக்க வேண்டுமெனவும், வீட்டில் உள்ள அனைவரிடமும் தான் மன்னிப்பு கேட்டுக்கொள்வதாகவும் அவர் தெரிவித்து உள்ளார். இந்த சம்பவம் குறித்து, காரமடை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.