மது அருந்த பெற்றோர் பணம் தராததால், இளைஞர் தற்கொலை!
அரியலூர்
உடையார்பாளையம் அருகே மதுஅருந்த தாயார் பணம் தராததால் மனமுடைந்த இளைஞர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
அரியலூர் மாவட்டம் உடையார்பாளைம் அடுத்துள்ள காங்கேயன் குறிச்சி பகுதியை சேர்ந்தவர் சுமதி. இவரது மகன் விஜய்(23). கூலி தொழிலாளி. மதுப்பழக்கத்திற்கு அடிமையான விஜய் குடித்து விட்டு வேலைக்கு செல்லாமல் இருந்து வந்துள்ளார். மேலும், பெற்றோரிடம் மது அருந்த பணம் கேட்டு அடிக்கடி தகராறு செய்து வந்துள்ளார்.
இந்த நிலையில், நேற்று முன்தினம் வீட்டில் இருந்த விஜய், மதுஅருந்த பணம் கேட்டு தாயார் சுமதியிடம் தகராறு செய்துள்ளார். ஆனால் அவர் பணம் தர மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த விஜய், அங்குள்ள ஏரிக்கரை பகுதியில் உள்ள மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து, அந்த பகுதி மக்கள் அளித்த தகவலின் பேரில் உடையார்பாளையம் போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரியலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.