சென்னையில் இருந்து விமானம் மூலம் கொழும்பை தாக்க புலிகள் திட்டமிட்டனர்: இலங்கை அதிபர் பரபரப்பு குற்றச்சாட்டு

 

சென்னையில் இருந்து விமானம் மூலம் கொழும்பை தாக்க புலிகள் திட்டமிட்டனர்: இலங்கை அதிபர் பரபரப்பு குற்றச்சாட்டு

விடுதலை புலிகள் கடந்த 2009-ம் ஆண்டு சென்னையில் இருந்து விமானம் மூலம் கொழும்பு நகரை தாக்க திட்டமிட்டனர் என இலங்கை அதிபர் மைத்ரிபால சிறிசேனா குற்றம்சாட்டியுள்ளார்.

நியூயார்க்: விடுதலை புலிகள் கடந்த 2009-ம் ஆண்டு சென்னையில் இருந்து விமானம் மூலம் கொழும்பு நகரை தாக்க திட்டமிட்டனர் என இலங்கை அதிபர் மைத்ரிபால சிறிசேனா குற்றம்சாட்டியுள்ளார்.

ஐக்கிய நாடுகள் சபை கூட்டத்தில் பங்கேற்பதற்காக அமெரிக்காவின் நியூயார்க் நகருக்கு இலங்கை அதிபர் மைத்ரிபாலா சிறிசேனா சென்றார். அப்போது அங்கு வாழும் சிங்களர்கள் இடையே உரையாடிய சிறிசேனா, கடந்த 2009-ம் ஆண்டு சென்னையில் இருந்தோ, வேறு ஒரு காட்டுப் பகுதியில் இருந்தோ கொழும்பு நகரில் உள்ள சில முக்கிய பகுதிகளில் விடுதலைப் புலிகள் வான்வழியாக வெடிகுண்டுகளை வீசி தாக்குதல் நடத்தப் போவதாக உளவுத்துறை மூலம் தகவல் வந்தது. இதை தொடர்ந்து அனைவரும் வெளியேறி விட்டனர்.

அந்த காலகட்டத்தில் இலங்கையின் அந்நாள் அதிபர், பிரதமர், பாதுகாப்புத்துறை செயலாளர் மற்றும் ராணுவ தளபதி அனைவருமே வெளிநாடுகளுக்கு சென்றிருந்தனர். தற்காலிக ராணுவ அமைச்சராக அப்போது நான் பொறுப்பேற்றிருந்தேன்.தாக்குதலுக்கு பயந்து நானும் கொழும்புவை விட்டு வெளியேறி வெவ்வேறு பகுதிகளில் அப்போது தங்கி இருந்தேன் என்றார்.

சென்னையில் இருந்து கொழும்பை தாக்க புலிகள் திட்டமிட்டிருந்தனர் என சிறிசேனா கூறியிருப்பது புதிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முன்னதாக கடந்த 2007 மற்றும் 2009-ம் ஆண்டுகளில் கொழும்பு நகரின் மீது இரண்டு முறை விமான தாக்குதல்களை விடுதலைப் புலிகள் நடத்தி இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.