இந்தியாவின் மக்கள் ஊரடங்கில் நடந்த நிகழ்வுகளை கிண்டல் செய்த சீன ஊடகங்கள்!
இந்தியாவில் கடந்த ஞாயிற்றுக் கிழமை நடந்த மக்கள் ஊரடங்கின்போது மருத்துவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்வில் நடந்த பல்வேறு செயல்களை பதிவிட்டு சீன ஊடகங்கள் கிண்டல் செய்துள்ளன.
பெய்ஜிங்: இந்தியாவில் கடந்த ஞாயிற்றுக் கிழமை நடந்த மக்கள் ஊரடங்கின்போது மருத்துவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்வில் நடந்த பல்வேறு செயல்களை பதிவிட்டு சீன ஊடகங்கள் கிண்டல் செய்துள்ளன.
மக்கள் ஊரடங்கு என்ற நல்ல முயற்சியை பிரதமர் மோடி அறிவித்தார். மேலும், ஊரடங்கின்போது மாலை 5 மணிக்கு வீட்டு பால்கனியில், வாசலில் நின்று கொரோனா பாதிப்புக்கு எதிராக போராடி வரும் மருத்துவப் பணியாளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் கைகளைத் தட்டும்படியும் கேட்டுக்கொண்டார்.
#BREAKING: Corona virus finally died today in india due to shock. pic.twitter.com/M4kC1xCVqm
— China Xinhua News (@x_xinhua) March 22, 2020
அதற்குள்ள மோடியின் கைதட்டிப் பாராட்டும் நல்ல எண்ணத்துக்கு மத சாயம் பூசப்பட்டது. அன்றைக்கு அமாவாசை, அதனால் அன்று எல்லோரும் ஒன்று கூடி கைதட்டினால், அதனால் வெளிப்படும் காஸ்மிக் எனெர்ஜி காரணமாக கிருமி அழிந்துவிடும். அடுத்த நாள் காலையில் சாலையில் கொரோனா வைரஸ் செத்துக் கிடக்கும் என்று எல்லாம் வதந்திகள் பரப்பப்பட்டன. இதை உண்மை என்று நம்பி பலரும் தட்டு முட்டு சாமான்களை எல்லாம் அடித்தனர். வீட்டைச் சுற்றி மணி அடித்து கொரோனாவை கொல்வதாக கூறினர்.
ஒரு பெண்மணி சாலையில் நின்று “கோ கொரோனா கோ” என்று வேகமாக தட்டை அடித்த காட்சி சமூக ஊடகங்களில் வைரல் ஆனது. இது போன்ற பல்வேறு காட்சிகளைத் தொகுத்து சீன ஊடகங்கள் வெளியிட்டு இந்தியாவை கிண்டல் செய்து வருகின்றன. சீனாவின் China Xinhua News என்ற ஊடகம் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் இந்த பெண்மணியின் வீடியோவை வெளியிட்டு, “இந்தியா அளித்த அதிர்ச்சி காரணமாக கொரோனா கடைசியில் இறந்துவிட்டது” என்று பரிகசித்துள்ளது. மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் மணி அடித்துக்கொண்டே வானத்தைப் பார்ப்பது உள்ளிட்ட மேலும் பல பரிகசிக்கும் வகையிலான பதிவுகள், வீடியோக்களை உலக ஊடகங்கள் வெளியிட்டு வருகின்றன.