இலங்கை அதிபர் தேர்தல் தேதி அறிவிப்பு..

இலங்கை அதிபர் தேர்தல் செப்டம்பர் 21ம் தேதி நடைபெறும் என அந்நாட்டு தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
இலங்கையில் கடந்த 2022ம் ஆண்டு ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி காரணகாக, அந்நாட்டில் மிகப்பெரிய புரட்சி வெடித்தது. கட்டுக்கடங்காமல் வெடித்த புரட்சியால், இலங்கை அதிபராக இருந்த கோத்தபய ராஜபக்சே, பிரதமராக இருந்த மகிந்த ராஜபக்சே உள்பட அமைச்சர் பதவிகளில் இருந்த ராஜபக்சே குடும்பத்தினர் அனைவரும் ராஜினாமா செய்துவிட்டு நாட்டை விட்டு வெளியேறினர். அதிபராக இருந்த கோத்தபய ராஜபக்சே சிஙகப்பூரில் தஞ்சமடைந்தார். அத்தகைய நெருக்கடியான சூழலில் இடைக்கால அதிபராக ரணில் விக்கிரமசிங்கே பொறுப்பேற்றார். தற்போது அனைத்துக் கட்சி ஆதரவுடன் அதிபராக இருக்கும் ரணிக் விக்கிரமசிங்கேவின் பதவிகாலம் வருகிற நவம்பர் மாதத்துடன் முடிவடைகிறது.
இதனால் அடுத்த அதிபர் தேர்தலுக்கான அறிவிப்பை இலங்கை தேர்தல் ஆணையம் முன்னதாகவே அறிவித்திருந்தது. அதன்படி வரும் செப்டம்பர் 17ம் தேதியில் இருந்து அக்டோபர் 16ம் தேதிக்குள் இலங்கை அதிபர் தேர்தல் நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்தநிலையில் தற்போது இலங்கை அதிபர் தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. வரும் செப்டம்பர் 21ம் தேதி இலங்கை அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது எனவும், ஆகஸ்ட் 15ம் தேதி முதல் வேட்புமனுக்களை தாக்கல் செய்யலாம் எனவும் தேர்தல் ஆணையம் தெரிவித்திருக்கிறது. அதிபர் தேர்தலில் ரணில் விக்கிரம்சிங்கேவும், முன்னாள் ராணுவ தளபதி சரத் பொன்சேகாவும் போட்டியிடுவதாக அறிவித்துள்ளனர்.