போரை முடிவுக்கு கொண்டுவர அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வோம் - பிரதமர் மோடி உறுதி!

 
Modi

உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா நடத்தி வரும் போரை முடிவுக்கு கொண்டுவர இந்தியாவால் முடிந்த அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வோம் என பிரதமர் மோடி கூறியுள்ளார். 

பொருளாதாரம் மற்றும் தொழில்நுட்ப ரீதியாக வளர்ந்த நாடுகளை கொண்ட ஜி7 கூட்டமைப்பின்  49வது உச்சி மாநாடு ஜப்பான் நாட்டின் ஹிரோஷிமா நகரில்  தொடங்கி நடைபெற்று வருகிறது. கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான், இங்கிலாந்து, அமெரிக்கா ஆகிய ஏழு உறுப்பு நாடுகள் மட்டுமே கொண்ட இந்த மாநாட்டில் இந்தியா,  ஆஸ்திரேலியா, பிரேசில்,  இந்தோனேஷியா, தென்கொரியா, மியான்மர், குக் தீவுகள் ஆகிய நாடுகள் சிறைப்பு விருந்தினர்களாக பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டது. இந்தியா சார்பில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றுள்ளார். மோடி உலக நாடுகளின் தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். ஜி7 உச்சி மாநாட்டின் இடையே ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடா, அமெரிக்க அதிபர் ஜோ பைடன், இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக், ஜெர்மனி அதிபர் ஒலாப் ஸ்கோல்ஸ், தென்கொரிய அதிபர் யூன் சிக் இயோல், இந்தோனேசிய அதிபர் ஜோகோ விடோடோ உள்ளிட்ட தலைவர்களை தனித்தனியாகச் சந்தித்தார்.  

இந்நிலையில், ஜி7 மாநாட்டில் பங்கேற்க வந்த உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியையும் பிரதமர் மோடியும் சந்தித்து ஆலோசனை நடத்தினார். உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்ததற்கு பிறகு முதல் முறையாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியுடன் பிரதமர் மோடி சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின் போது ஜெலன்ஸ்கியுடன் பிரதமர் மோடி கூறுகையில், போரை முடிவுக்கு கொண்டுவர இந்தியா மற்றும் தனிப்பட்ட முறையில் என்னால் ஆன அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வோம். இந்த மோதலை அரசியல், பொருளாதார கண்ணோட்டத்தில் பார்க்கவில்லை. இது மனிதாபிமானம், மனித மதிப்பு தொடர்பான பிரச்சினையாக பார்க்கிறோம். கடந்த ஒன்றரை ஆண்டுகளாக நாம் தொலைபேசியில் பேசியுள்ளோம். நீண்ட நாட்களுக்கு பிறகு நாம் நேருக்கு நேர் சந்தித்துள்ளோம். உக்ரைன் போர் ஒட்டுமொத்த உலகத்திற்கும் பெரிய பிரச்சினை. ஒட்டுமொத்த உலகத்திலும் பல்வேறு பாதிப்புகளை போர் ஏற்படுத்தியுள்ளது. இவ்வாறு கூறினார்.