கைலாசா தனிநாடு என நம்பவைத்த ஏமாற்றிய நித்தியானந்தா சீடர்கள்

கைலாசா தனி நாடு என்று சொல்லி நம்ப வைத்து 30 அமெரிக்க நகரங்களை ஏமாற்றி உள்ளனர் நித்தியானந்தாவின் சீடர்கள்.
திருவண்ணாமலையில் பிறந்து வளர்ந்த நித்தியானந்தா கர்நாடக மாநிலம் பிடதியில் ஆசிரமம் அமைத்து உலகம் முழுவதும் பிரபலமானார். திடீரென்று பாலியல் வழக்கு, கடத்தல் வழக்கு உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் போடப்பட்டதால் கைது நடவடிக்கைக்கு பயந்து வெளிநாட்டிற்கு தப்பிச் சென்றார். ஈக்வடாரில் தீவு ஒன்றை வாங்கி அதில் தனிநாடு அமைத்து வருவதாக அவ்வப்போது அதற்கான அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார். அதற்கு கைலாசா என்று பெயர் வைத்து கைலாசா நாட்டில் தனது சீடர்களுடன் நித்தியானந்தா இருப்பதாக அடிக்கடி சொல்லி வருகிறார் .
கைலாசாவிற்கு என்று தனி நாணயங்கள் , தனி சட்ட திட்டங்கள் எல்லாம் உருவாக்கி வருகிறார் நித்தியானந்தா. கைலாசா என்பது தனி நாடு என்பதை உறுதிப்படுத்தும் விதமாக அமெரிக்காவில் நியூ ஜெர்சி மாகாணத்தில் உள்ள நெவார்க் நகரத்துடன் கைலாசா நாடு சிஸ்டர் சிட்டி ஒப்பந்தம் செய்து கொண்டதாக அந்நகர பிரதிநிதிகளுடன் கைலாசா பிரதிநிதிகள் கையெழுத்திடும் காட்சி அடங்கிய வீடியோ கடந்த ஜனவரி மாதம் 12ஆம் தேதி அன்று வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
கைலாசாவை தனி நாடாக அமெரிக்கா அறிவித்திருப்பதாக தொடர்ந்து அதுகுறித்து சொல்லி வந்தனர் நித்தியானந்தாவின் சீடர்கள். இதன் பின்னர் கைலாசா நெவார்க் நகரம் மட்டுமல்லாமல் கைலாசாவுடன் ரிச்மண்ட் , வர்ஜீனியா, டேடன் , ஓகியோ, புளோரிடா உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட அமெரிக்க நகரங்கள் ஒப்பந்தம் செய்திருப்பதாக பரபரப்பு தகவல்கள் வெளியாகி வந்தன .
அமெரிக்க நகரங்களின் பிரதிநிதிகளை நித்தியானந்தாவின் சீடர்கள் தனி நாடு என்பதாக நம்ப வைத்து உள்ளார்கள். இதன் காரணமாகத்தான் இருதரப்பு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி உள்ளன. இது குறித்து கரோலினாவைச் சேர்ந்த ஜாக்சன் வில் என்பவர், நாங்கள் கையெழுத்திட்டு இருப்பதாலேயே கைலாசாவுக்கு ஒப்புதல் அளித்ததாக அர்த்தம் இல்லை. அவர்கள் முன்வைத்த கோரிக்கைகளுக்கு பதில் அளித்து இருக்கிறோம். அவ்வளவுதான் . அவர்கள் கோரிக்கை வைத்த போது நாங்கள் அவர்களின் பின்னணியை சரி பார்க்கவில்லை என்று தங்கள் தவறை விளக்கி இருக்கிறார்கள்.