இம்ரான் கான் பாகிஸ்தானில் இருந்து வெளியேற தடை..

பாகிஸ்தான் முன்னாள் முதல்வர் இம்ரான் கான், அவரது மனைவி உள்பட பி.டி.ஐ கட்சியைச் சேர்ந்த 80 பேர் பாகிஸ்தானில் இருந்து வெளியேற, அந்நாட்டு அரசு தடை விதித்துள்ளது.
தெஹ்ரீக் இ இன்சாப் கட்சி தலைவர் இம்ரான் கான் பிரதமராக இருந்தபோது அல் - காதர் அறக்கட்டளை மூலம் 5000 கோடி ரூபாய் ஊழல் செய்ததாக அவர் மீது இருந்த குற்றச்சாட்டு எழுந்தது. அதன்பேரில் வழக்கு ஒன்றில் ஆஜராக வந்த அவர், கடந்த மே 9-ஆம் தேதி நீதிமன்ற வளாகத்திலேயே வைத்து துணை ராணுவப் படையினரால் அதிரடியாக கைது செய்யப்பட்டார். இதனைக் கண்டித்து இம்ரான் கான் ஆதரவாளர்கள் நாடு முழுவதும் போராட்டங்களில் ஈடுபட்டனர். அப்போது பல்வேறு இடங்களில் வன்முறை வெடித்தது.
ராவல் பிண்டியில் உள்ள ராணுவ தலைமையகம், லாகூர் படைப்பிரிவு கமாண்டர் அலுவலகம், மியான்வாலி விமானப்படை தளம் மற்றும் பைசலாபாத்தில் உள்ள ஐ.எஸ்.ஐ கட்டிடம் உட்பட பல ராணுவ தளங்களை இம்ரான்கான் ஆதரவாளர்கள் சேதப்படுத்தினர். இந்த வன்முறையின்போது 10 பேர் பலியானதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ராணுவ நிலையங்களை தாக்கியதால் இம்ரான் கானின் தெஹ்ரீக்-இ-இன்சாப் கட்சியை (PTI) தடை செய்வது குறித்து அந்நாட்டு அரசு ஆலோசித்து வருகிறது. இந்த சூழலில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான், அவரது மனைவி புஸ்ரா பீவி உள்பட பி.டி.ஐ கட்சியைச் சேர்ந்த 80 பேர் பாகிஸ்தானில் இருந்து வெளியேற தடை விதிக்கப்பட்டுள்ளது. ஷெபாஸ் ஷெரீப் தலைமையிலான பாகிஸ்தான் அரசு இந்த அதிரடி நடவடிக்கையை எடுத்துள்ளது.