கொரோனா தடுப்பு மருந்து … சவாலை ஏற்ற அமெரிக்க அதிபர் மகள்!
கொரோனாவின் கோரப்பிடியில் இந்த உலகம் சிக்கித் தவிக்கிறது. சில நாடுகளில் நோய்த் தொற்று கட்டுக்குள் வைக்கப்பட்டாலும், பல நாடுகளில் தினந்தோறும் புதிய நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே உள்ளது.
உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டிப்போர். 2 கோடியே 84 லட்சத்து 29 ஆயிரத்து 498 பேர்.
கொரோனா நோய்த் தொற்றால் சிகிச்சை பலன் அளிக்காது இறந்தவர்கள் 9 லட்சத்து 14 ஆயிரத்து 219 பேர். இறப்போர் சதவிகிதம் குறைந்துகொண்டே வந்தாலும் புதிய நோயாளிகளும் அதிகரித்து வருகிறார்கள்.
கொரோனா தடுப்பு மருந்து ஒன்றே தீர்வு எனும் நிலைமையை நோக்கி உலகம் சென்றுகொண்டிருக்கிறது. உலகின் முதல் கொரோனா தடுப்பூசியைக் கண்டுபிடித்துவிட்டதாக சென்ற மாதம் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் அறிவித்தார்.
ஸ்புட்னிக் V என்று பெயரிடப்பட்ட அந்தத் தடுப்பூசி ஆகஸ்ட் 12-ம் தேதி பதிவும் செய்யப்பட்டது. ஆயினும் அந்த மருந்தின் நம்பகத்தன்மை குறித்து எதிர்கட்சிகளாலும், சில நாடுகளாலும் கேள்வி எழுப்பப்பட்டது. அதனால் தன் மகளுக்கே அந்தத் தடுப்பூசியைப் போட வைத்திருக்கிறார் ரஷ்ய அதிபர் எனும் செய்திகள் வெளியாயின.
கொரோனா தடுப்பூசியின் தேவை முதலில் அதிகம் உள்ள நாடு அமெரிக்கா. ஏனெனில், அங்குதான் மரணம் அடைந்தவர்களின் எண்ணிக்கை 2 லட்சத்தை நெருங்கிவிட்டது. நவம்பர் 3-ம் தேதி தேர்தல் என்பதால் அதற்கு தடுப்பூசியைக் கொண்டுவர கடும் முயற்சியில் இருக்கிறார் அதிபர் ட்ரம்ப்.
நிச்சயம் அக்டோபர் இறுதிக்குள் அமெரிக்காவில் கொரோனா தடுப்பூசி மக்களுக்குச் செலுத்தும் வகையில் தயாராகி விடும் என்று செய்திகள் தெரிவிக்கின்றன. ஆனால், அதற்கு சாத்தியமே இல்லை என்று எதிர்கட்சிகள் கூறுகின்றன.
இந்நிலையில் தொலைக்காட்சி ஒன்றில் எதிர்கட்சிகளின் சந்தேகங்களை எழுப்பிய தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளர், இந்தத் தடுப்பூசியை அமெரிக்க அதிபரின் மகள் இவாங்கா போட்டுக்கொண்டால், தான் போட்டுக்கொள்ள தயார் என்று தெரிவித்தார்.
தொகுப்பாளரின் சவாலைத் துணிவோடு ஏற்றுக்கொண்டார் அதிபரின் மகள் இவாங்கோ. இதன்மூலம் எதிர்கட்சிகள் முன்வைக்கும் நம்பகத்தன்மை குறித்த சந்தேகங்கள் விலகும் என்று கூறப்படுகிறது.