பூமிக்கு பேராபத்து... காலநிலை மாற்றத்தால் ஒருவர் பாதிப்பு - கனடாவில் பதிவான "உலகின்" முதல் கேஸ்!
புவி வெப்பமயமாதல் அணு ஆயுதங்களைக் காட்டிலும் பூமிக்கு மிகப்பெரிய அச்சுறுத்தல் ஏற்படுகிறது. இதனால் ஏற்படும் காலநிலை மாற்றங்கள் பூமியை மெல்ல மெல்ல அழித்துக் கொண்டிருக்கும் மறைமுகமான விஷம் என்றே சொல்லலாம். மனிதர்கள் ஏற்படுத்தும் சுற்றுச்சூழலுக்கும் சீர்கேட்டினால் தான் புவி அதிவேகமாக வெப்பமடைவதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள். இதன் காரணமாக காட்டுத்தீ ஏற்படுகிறது. பருவ மழைகள் பருவத்திற்கு பேய்வதில்லை. பேய்ந்தாலும் வேறு பருவத்தில் பெய்து விவசாயத்தை சீரழிக்கின்றன.
இதனால் மக்களுக்கு நோய்கள் ஏற்படும் எனவும் ஆராய்ச்சியாளர்கள் எச்சரித்துள்ளனர். அவர்கள் எச்சரித்தபடியே காலநிலை மாற்றத்தால் கனடாவில் ஒருவர் பாதிக்கப்பட்டுள்ளார். உலகளவில் காலநிலை மாற்றத்தால் மனிதர் ஒருவருக்கு பாதிப்பு ஏற்படுவது இதுவே முதன்முறை என சொல்லப்படுகிறது. காட்டுத்தீயால் அவருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டதாகவும், அதற்கு சிகிச்சையளித்துள்ளதாகவும் சம்பந்தப்பட்ட மருத்துவமனை தெரிவித்துள்ளது. கனடாவில் இருக்கும் பிரிட்டீஸ் கொலம்பியா மாகாணத்தில் அமைந்துள்ள கூடெனாய் பகுதியில் பயங்கர காட்டுத்தீ ஏற்பட்டது.
இந்தக் காட்டுத்தீயால் தான் அந்த நபர் பாதிக்கப்பட்டதாக மருத்துவமனை கூறியுள்ளது. மேலும் கனடாவில் சமீபத்தில் ஏற்பட்ட வெப்ப அலை, காற்று மாசாலும் அவர் மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளார்; அவரது நிலை மிகவும் மோசமாகியுள்ளதாக அவருக்கு சிகிச்சையளித்துக் கொண்டிருக்கும் மருத்துவர் கைல் கூறியுள்ளார். இந்த ஆண்டு மட்டும் இந்தப் பகுதியில் 1,600 காட்டுத்தீ சம்பவங்கள் ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டு வனத்துறை தெரிவித்துள்ளது. ஸ்காட்லாந்தில் சமீபத்தில் நடைபெற்ற காலநிலை மாற்ற கிளாஸ்கோ உச்சி மாநாட்டில் மனிதர்களின் சுகாதார பிரச்சினைகளுக்கு காலநிலை நெருக்கடிக்கும் இடையேயான தொடர்பு குறித்து தான் விவாதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இதில் பிரதமர் மோடி உள்ளிட்ட பல்வேறு உலக தலைவர்கள் கலந்துகொண்டனர்.