உலக வரைபடத்திலிருந்து உக்ரைனை நீக்க முயற்சி.. - ரஷ்யாவை சாடிய அதிபர் பைடன்..

 
joe biden

உலக வரைபடத்தில் இருந்து இறையாண்மை நாடான உக்ரைனை நீக்கி விட ரஷ்யா முயற்சி செய்து வருவதாக   அமெரிக்க அதிபர் ஜோ பைடன் குற்றம் சாட்டியுள்ளார்.

உக்ரைன் மீது ரஷ்யா நடத்திவரும் போர் இன்று  210 ஆவது நாளை எட்டியுள்ளது.  இந்த போரில் இதுவரை ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். உக்ரைனில் ரஷ்யா கைப்பற்றிய நகரங்களை, உக்ரைன் மீண்டும் மீட்டு வருகிறது.  இந்நிலையில் உக்ரைன் மீதான தாக்குதலை தீவிரப்படுத்த ரஷ்ய அதிபர் புதின், அதிரடியான திட்டங்களை கையிலெடுத்துள்ளார்.  இந்தச் சூழலில்,   உலக வரைபடத்திலிருந்து உக்ரைனை நீக்க ரஷ்ய முயன்று வருவதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் குற்றம் சாட்டியுள்ளார்.  

 russia

 நியூயார்க் நகரில் நடைபெற்று வரும் ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் 77வது கூட்டத்ம் நடைபெற்று வருகிறது. இதில் பேசிய அவர்,  அண்டை நாட்டினர் மீது ரஷ்யா போர் தொடுத்தது வெட்ககேடான செயல் என்று விமர்சித்துள்ளார். அத்துடன்  ஐக்கிய நாடுகள் சாசனத்தின் முக்கிய கொள்கைகளை ரஷ்யா மீறியதாக  குற்றம் சாட்டிய அவர்,  உக்ரைனை கைப்பற்ற ராணுவத்தில் பழைய வீரர்களை சேர்க்க ரஷ்யா அழைப்பு விடுப்பதாக தெரிவித்தார்.  ரஷ்யாவின் அத்துமீறலை உலக நாடுகள் கவனிக்க வேண்டும் என்று  பைடன்  கேட்டுக்கொண்டார்.

putin

இதற்கிடையே  ரஷ்யாவின் கட்டுப்பாட்டில் உள்ள உக்ரைனின் சில பிராந்தியங்களை, பொது வாக்கெடுப்பு நடத்தி அவற்றை ரஷ்யாவுடன் இணைப்பதற்காக நடவடிக்கைகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.   அத்துடன்  ராணுவ பயிற்சி பெற்ற, அனுபவம் கொண்ட  சுமார் 3 லட்சம் முன்னாள் ராணுவ வீரர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருப்பதாக ரஷ்ய பாதுகாப்புத்துறை அமைச்சர் தெரிவித்திருக்கிறார்.  இந்நிலையில் மேற்கத்திய நாடுகள் அணு ஆயுதங்களை வைத்து மிரட்டுவதாக கூறிய அதிபர் புதின்,  பதிலடி கொடுக்க எங்களிடமும் ( ரஷ்யா) நிறைய அணு ஆயுதங்கள் இருப்பதாக  அவர் எச்சரிக்கை விடுத்திருப்பதால் பதற்றமான சூழல்  ஏற்பட்டுள்ளது.