வாடகை பாக்கி.. சிங்கப்பூரில் ட்விட்டர் ஊழியர்கள் அலுவலகத்தில் இருந்து வெளியேற்றம்..

 
ட்விட்டர்

சிங்கப்பூரில் உள்ள ட்விட்டர் அலுவலகத்திற்கு வாடகை செலுத்தாததால், அலுவலகத்தில் இருந்த ஊழியர்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர்.

ட்விட்டர் நிறுவனத்தின் ஆசிய - பசிபிக் மண்டலத்துக்கான தலைமை அலுவலகம் சிங்கப்பூரில் செயல்பட்டு வருகிறது.  சிங்கப்பூரில் கேப்பிட்டா க்ரீன் என்ற பிரம்மாண்டமான கட்டிடத்தில் தான் அந்த  அலுவலகம் இயங்கிவந்தது. இந்நிலையில் ஊழியர்கள் இனி வீட்டிலிருந்தே  பணி புரியலாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இது தொடர்பாக ட்விட்டர் ஊழியர்களுக்கு இ-மெயில் மூலம் தகவல் அனுப்பப்பட்டுள்ளது. அத்துடன் செலவினங்களைக் கட்டுப்படுத்தும் விதமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. அனைத்து ஊழியர்களும் வீட்டிலிருந்து பணி புரியுமாறும்,  அடுத்த தகவல் வரும்வரை இதே நிலையையே  தொடருமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

உலகின் மிக நீண்ட தூர சொகுசு கப்பல் சுற்றுலா சேவை தொடக்கம்

அண்மையில் தான் ஆசிய பசிபிக் மண்டலத்துக்கான  தலைமை அலுவலத்தில்  முக்கிய ஊழியர்களில் ஒருவரான,  நூர் அசார் பின் அயோப் பணி நீக்கம் செய்யப்பட்டார். அவர் பணியில் சேர்ந்த குறுகிய காலத்திலேயே அவர் பணி நீக்கம் செய்யப்பட்டது பேசுபொருளானது. இந்தச் சூழலில்,  ஆசிய - பசிபிக் பிராந்திய தலைமை அலுவலகமே காலியாகும் நிலை ஏற்பட்டுள்ளது.  அதேநேரம், சான் பிரான்சிஸ்கோவில் உள்ள ட்விட்டர் தலைமையக கட்டிடத்திற்கான கடந்த மாத வாடகையை இன்னும் செலுத்தவில்லை என்று கூறப்படுகிறது. இதற்காக அந்தக் கட்டிடத்தின்  உரிமையாளர் வழக்கு தொடர்ந்துள்ளார்.  சிங்கப்பூர் அலுவலகத்தை காலி செய்வதற்கும் வாடகை செலுத்தாததே காரணமாக இருக்கக்கூடும்  என்று தகவல்கள் கூறுகின்றன.