இலங்கையின் இடைக்கால அதிபராக பதவியேற்றார் ரணில்

 
srilanka

இலங்கையின் இடைக்கால அதிபராக முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கே பதவியேற்றுக்கொண்டார். 

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு  ராஜபக்சே குடும்பமே காரணம் என , அரசுக்கு எதிராக மக்கள் கடந்த 3 மாதங்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.   மக்கள் போராட்டம் வெடித்ததும், மஹிந்த ராஜபக்சே தலைமையிலான அரசு பதவி விலகி, ரணில் விக்ரமசிங்கே புதிய பிரதமராக பொறுப்பேற்றுக்கொண்டார்..  ஆனால் அதன்பிறகும் அங்கு  பிரச்சனைகளும், நெருக்கடிகளும் குறைந்தபாடில்லை. மக்கள் போராட்டமும் முடிவுக்கு வரவில்லை.   3 நாட்களுக்கு முன்பு அதிபர்  மக்கள் அதிபர் மாளிகைக்குள் நுழைந்ததால் போராட்டம் உச்சகட்டத்தை எட்டியது.   இதனையடுத்து அதிபர் கோத்தபய ராஜபக்சே குடும்பத்தினருடன் மாலத்தீவுகளுக்கு தப்பியோடினார். பின்னர் அங்கிருந்து சிங்கப்பூருக்கு தப்பிச்சென்றார். இதனை தொடர்ந்து நேற்றிரவு இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே தனது பதவியை அதிகாரப்பூர்வமாக ராஜினாமா செய்தார். தனது ராஜினாமா கடிதத்தை இலங்கை நாடாளுமன்ற சபாநாயகருக்கு அவர் அனுப்பிவைத்தார்.

இந்நிலையில், இலங்கையின் இடைக்கால அதிபராக முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கே பதவியேற்றுக்கொண்டார். இலங்கை உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி ரணில் விக்ரமசிங்கேவிற்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார்.