தொடர் பின்னடைவால் கலக்கத்தில் நாசா... 3வது முறையாக ஆர்டெமிஸ் - 1 திட்டம் ஒத்திவைப்பு..

நிலவுக்கு ராக்கெட் அனுப்பும் நாசாவின் ஆர்டெமிஸ்-1 திட்டம் 3வது முறையாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
சுமார் 53 ஆண்டுகள் கழித்து நாசா நிலவுக்கு மனிதர்களை அனுப்புவதற்காக 'ஆர்டெமிஸ்' என்ற திட்டத்தை நாசா தொடங்கியது. இதில் மனிதர்களை அனுப்பி, நீண்ட காலம் நிலவில் தங்க வைத்து ஆய்வு செய்யவும் ஏற்ற வகையில் இந்த பயணத்திட்டத்தை கையில் எடுத்துள்ளது. இந்த திட்டம் மூலம் 2025 ஆம் ஆண்டு நிலவுக்கு மனிதனை அனுப்பவுள்ளது. அதன்படி, ஆர்டெமிஸ் 1 திட்டத்தை செயல்படுத்த இந்த திட்டத்தின் முதல்படியாக நிலவு குறித்த ஆராய்ச்சிக்காக, ஓரியன் விண்கலத்தை எஸ்எல்எஸ் (SLS) ராக்கெட் மூலம் அனுப்ப ஏற்பாடு செய்திருந்தது.
கடந்த ஆகஸ்டு மாதம் 29-ம் தேதி மாலை 6.03 மணியளவில் கென்னடி விண்வெளி ஆராய்ச்சி மையத்திலிருந்து ராக்கெட் ஏவப்படும் என அறிவிக்கப்பட்டு அதற்கான கவுண்ட் டவுனும் தொடங்கப்பட்டது. ஆனால் கடைசி நேரத்தில் ராக்கெட்டின் 4 என்ஜிகளில் ஒன்றில் கோளாறு ஏற்பட்டது. இதன் காரணமாக ராக்கெட்டை செலுத்தும் திட்டம் நிறுத்தப்பட்டது. பின்னர் இந்த ஆர்டெமிஸ் திட்டம் கைவிடப்படுவதாகவும் கூறப்பட்டது. பின்னர் என்ஜினை சரிசெய்யும் பணியில் பொறியாளர்கள் தீவிரமாக ஈடுபட்டு வந்தனர். பின்னர் , நிலவுக்கு மனிதனை அனுப்பும் சோதனை முயற்சியாக ஆர்டெமிஸ்-1 ராக்கெட்டை மீண்டும் செப்டம்பர் 3ம் தேதி விண்ணில் ஏவவுள்ளதாக நாசா அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.
ஆனால் கவுன்டவுன் தொடங்குவதற்கு முன்னதாகவே ராக்கெட்டில் இருந்து எரிபொருள் கசிந்ததால் Artemis - 1 திட்டம் மீண்டும் நிறுத்தப்பட்டது. இதையடுத்து SLS ராக்கெட்டை வருகிற 23ம் தேதி நிலவுக்கு அனுப்ப திட்டமிட்டிருந்த நாசா, அதற்கான முன்னேற்பாடுகளை செய்து வந்தது. ஆனால் ஏற்கனவே ராக்கெட்டில் ஏற்பட்டிருந்த பழுதுகளை சரிசெய்ய கூடுதலாக அவகாசம் தேவை பொறியாளர்கள் குழு கேட்டுக்கொண்டுள்ளது. ஆகையால் ஆர்டெமிஸ் - 1 திட்டம் 3வது முறையாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அதேநேரம் பழுதுகள் முழுமையாக சரிசெய்யப்பட்டு வருகிற 27ம் தேதி SLS ராக்கெட் விண்ணில் ஏவப்படும் என்று நாசா அறிவித்துள்ளது.