ரஷ்ய அதிபர் புதினுக்கு மூளையில் அறுவை சிகிச்சையா?? - வெளியான புதிய தகவலால் பரபரப்பு..
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுக்கு மூளை நரம்பியல் அறுவை சிகிச்சை செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த சில மாதங்களாகவே ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினின் உடல்நிலை குறித்து பல விதமான செய்திகள் வெளியான வண்ணம் இருக்கின்றன. உக்ரைன் போரின் மத்தியில், புதினின் உடல்நிலை தொடர்ந்து மோசமடைந்து வருவதாகவும், கடந்த ஜூன் மாதம் ஒரு தகவல் வெளியானது. ரஷ்ய அதிபர் புதினுக்கு புற்றுநோய் இருப்பதாகவும், தனது உடல்நலப் பிரச்சினைகள் காரணமாக, ஆட்சி அதிகாரத்தில் இருந்து விலகப் போகிறார் என்றும் கூட ஒரு தகவல் பரவியது. ஒரு ராணுவக் கூட்டத்தின்போது, புதின் மயங்கி விழும் நிலைக்குச் சென்றதாகக் கூட செய்திகள் பரவின.
இந்த நிலையில், ரஷ்யா - உக்ரைன் போர் தொடர்பான சில செய்திகள், அதிபர் புதினின் உடல்நலம் பற்றிய கவலையை எழுப்பி வருகின்றன. அண்மையில் ரஷ்யப்படைகள் உக்கரனின் தெற்கு பகுதி நகரமான கெர்சனில் இருந்து திரும்ப பெறப்பட்டன. இது தொடர்பான அறிவிப்பை நவம்பர் 9ம் தேதி ரஷ்ய பாதுகாப்பு அமைச்சர் மற்றும் உக்ரைனுக்கு எதிரான போரில் தலைமை வகிக்கும் ராணுவ தளபதி ஆகியோர் ராணுவ கட்டுப்பாட்டு அறையில் இருந்து செய்தியாளர்களின் கேமராக்களில் தோன்றி அறிவித்தனர் .
அப்போது அதிபர் புதினை அந்த ஊடக சந்திப்பில் காணவில்லை. அப்போது அவர் மாஸ்கோவில் உள்ள ஒரு மருத்துவமனையில் மூளை நரம்பியல் அறுவை சிகிச்சை மேற்கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது. மற்றொரு நிகழ்ச்சியில் புதின் பேசியபோதும், கெர்சனில் இருந்து ராணுவ வீரர்கள் பின்வாங்கல் குறித்து குறிப்பிடவில்லை. இது ரஷ்யாவுக்கு பின்னடைவாக கருதப்படுகிறது.