ஆட்குறைப்பு நடவடிக்கையில் எலான் மஸ்க்...கலக்கத்தில் டுவிட்டர் ஊழியர்கள்
டுவிட்டர் நிறுவனத்தை விலைக்கு வாங்கியுள்ள எலான் மஸ்க் பணி நீக்கம் செய்யப்பட வேண்டிய தொழிலாளர்களின் பட்டியலை அளிக்க மேலாளர்களுக்கு உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
உலகப் பெரும் பணக்காரரான எலான் மஸ்க், ஸ்பேஸ் எக்ஸ், டெஸ்லா நிறுவனங்களை நடத்தி வருகிறார். இந்நிலையில், கடந்த ஏப்ரல் மாதம் 44 பில்லியன் டாலருக்கு ட்விட்டரை வாங்கவிருப்பதாக எலான் மஸ்க் அறிவித்திருந்தர். பின்னர் ட்விட்டர் நிறுவனத்தை வாங்கும் முடிவை கைவிடப்போவதாக அறிவித்தார். அதன்பிறகு ட்விட்டர் நிறுவனம் நீதிமன்றத்தை நாடியதால், மீண்டும் நானே வாங்கிக் கொள்கிறேன் என்று கூறினார். இதனையடுத்து கடந்த வியாழக்கிழமை ட்விட்டர் நிறுவனத்தை முழுவதுமாக கைப்பற்றினார். இந்நிலையில், ட்விட்டர் நிறுவனத்தை தனது கட்டுப்பாட்டில் கொண்டு வந்த உடனே, முதல் வேலையாக ட்விட்டர் சிஇஓ பராக் அகர்வாலை பணி நீக்கம் செய்திருக்கிறார். அவர் மட்மின்றி ட்விட்டரில் தலைமை நிதி அதிகாரி நெட் சேகல், சட்டத்துறை தலைவர் விஜயா கட்டே, பொது ஆலோசகர் சீன் எட்கல் என உயர் அதிகாரிகள் பலரையும் அடுத்தடுத்து அதிரடியாக பணி நீக்கம் செய்தார்.
இந்நிலையில், பணி நீக்கம் செய்யப்பட வேண்டிய தொழிலாளர்களின் பட்டியலை அளிக்க மேலாளர்களுக்கு எலான் மஸ்க் உத்தரவிட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. நவம்பர் 1ஆம் தேதிக்குள் ஆட்குறைப்பு நடவடிக்கை தொடங்கப்படும் என்று செய்திகள் வெளியாகியுள்ளன. பணியாளர்களின் எண்ணிகையை 75 சதவீதம் அளவிற்கு குறைக்கவும், மூன்று ஆண்டுகளில் வருவாயை இரட்டிப்பாக்க முயற்சி எடுக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளன. அதன்படி, தற்போது தற்போது சுமார் 7500 ஊழியர்கள் டுவிட்டரில் பணிபுரிந்து வரும் நிலையில், அந்த எண்ணிக்கை 2000 ஆக குறைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.