போர் நிறுத்த அறிவிப்பு ரஷ்யாவின் நாடகம்.. உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி விமர்சனம்..

 
Ukraine president zelensky


ரஷ்ய அதிபரின் போர் நிறுத்த அறிவிப்பு திட்டமிட்ட நாடகம் என்றும், தங்கள் தரப்பு தாக்குதல் தொடரும் என்றும்  உக்ரைன் தெரிவித்துள்ளது.

ரஷ்யா - உக்ரைன் இடையே போர் தொடங்கி ஓராண்டு நெருங்கவுள்ளது.  தற்போது 316வது நாளை எட்டிவிட்ட  நிலையில்,  இருநாடுகளும்  சமாதான  பேச்சுவார்த்தையில் ஈடுபட வேண்டும் என்று உலக நாடுகள் கோரிக்கை விடுத்து வருகின்றன.  சமரச பேச்சுவார்த்தைக்கு உக்ரைன் இறங்கி வந்தாலும், ரஷ்ய அதிபர் புதின்  இறங்கி வருவதில்லை.. இந்நிலையில், தற்போது முதன்முறையாக புதின் சமரச பேச்சுவார்த்தைக்கு  சம்மதம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. ஆனால்,  உக்ரைனில் ரஷ்ய படைகளால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள பகுதிகளை ரஷ்யாவின் பகுதியாக ஏற்றுக்கொண்டால், பேச்சுவார்த்தை நடத்தத் தயாராக இருப்பதாக புதின் தெரிவித்திருக்கிறார்.

ukraine

இதனிடையே ரஷ்யாவில்  ஆர்த்தோடாக்ஸ் கிறிஸ்துமஸ் கொண்டாட வசதியாக இன்று மதியம் முதல் நாளை வரை 36 மணி நேரத்திற்கு  போரை நிறுத்துமாரு  அதிபர் புதின் உத்தரவிட்டிருக்கிறார். இந்நிலையில் இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி,  ரஷ்ய அதிபரின் போர் நிறுத்த அறிவிப்பு திட்டமிட்ட நாடகம் என்று விமர்சித்துள்ளார். மேலும், உக்ரைனில் ரஷ்யா பிடித்து வைத்துள்ள பகுதிகளை விட்டு முதலில் வெளியேற வேண்டும் என்றும்,  அப்போது தான் அது தற்காலிக போர் நிறுத்தமாக இருக்கும் என்றும் கூறினார்..  

ukrain president

போர் முடிவு பிரகடனம் ரஷ்யாவின் தந்திரமான செயல் என்று கருதுவதாகவும், போரை முடிவுக்கு கொண்டு வருவதில் எங்களுக்கு விருப்பம் இல்லை என்றும் திட்டவட்டமாக கூறினார்.. ரஷ்யாவின் சூழ்ச்சி முயற்சிக்கு பதில் அளிக்க வேண்டியதில்லை என்றும்,  ஆயுதங்களை குவிக்கவே ரஷ்யா போர் நிறுத்த நாடகம் செய்கிறது என்றார்.  அத்துடன் தங்களது தாக்குதல் தொடரும் என்றும் அவர்  திட்டவட்டமாக அறிவித்துள்ளதால், பரபரப்பான சூழல் நிலவுகிறது.