இங்கிலாந்து பிரதமர் தேர்தல் : இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ரிஷி சுனக் முதலிடம்..
இங்கிலாந்து பிரதமர் பதவிக்கான முதல்; சுற்று தேர்தலில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ரிஷி சுனக் வெற்றி பெற்றுள்ளார். இதனைத்தொடர்ந்து இன்று இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.
இங்கிலாந்தில் போரிஸ் ஜான்சன் தலைமையிலான பழமைவாத கட்சி ஆட்சியில் இருந்தது. இந்நிலையில் அக்கட்சியின் துணை கொறடாவாக இருந்த எம்.பி. கிறிஸ் பின்சர், இரவு கேளிக்கை விடுதியில் 2 ஆண்களிடம் பாலியல் ரீதியில் அநாகரிகமாக நடந்து கொண்டதாக புகார் எழுந்தது. இந்தக் குற்றச்சாட்டை அடுத்து அவர் தனது பதவியை ராஜினாமா செய்தார். இதனையடுத்து , நிதி அமைச்சர் ரிஷி சுனக், சுகாதாரத் துறை அமைச்சர் சஜித் ஜாவித் ஆகியோர் திடீரென நேற்று தங்கள் பதவியை ராஜினாமா செய்தனர். அடுத்தடுத்து 48 மணி நேரத்தில் 54 பேர் பதவி விலகியதை அடுத்து, போரிஸ் ஜான்சன் தனது பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார். தற்போது தற்காலிக பிரதமராக அவர் இருந்து வருகிறார்.
இதனையடுத்து நாட்டின் புதிய பிரதமருக்கான போட்டியில் கன்சர்வேடிவ் கட்சியைச் சேர்ந்த 11 பேர் களமிறங்கினர். அதில் முன்னாள் நிதியமைச்சரும், இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவருமான ரிஷி சுனக்கும் ஒருவர். கடைசி நேரத்தில் போக்குவரத்து மந்திரி கிராண்ட் ஷேப்ஸ், ரகுமான் சிஸ்டி, முன்னாள் சுகாதார மந்திரி சஜித் ஜாவித் ஆகியோர் விலகுவதாக அறிவித்த நிலையில், தற்போது 8 பேர் களத்தில் உள்ளனர்.
ரிஷி சுனக்கிற்கு வெற்றி வாய்ப்பு அதிகம் இருக்கும்பட்சத்தில், அவர் இந்திய வம்சாவளி பூர்வீகத்தைச் சேர்ந்தவர் என்பது தடையாக இருக்கிறது. இந்த நிலையில் நேற்று நடைபெற்ற முதல் சுற்று வாக்குப்பதிவில் கன்சர்வேட்டிங் கட்சியின் 358 எம்பிக்கள் வாக்களித்தனர். இதில் ரிஷி சுனக் 88 வாக்குகள் பெற்று முதலிடம் பிடித்து அடுத்த சுற்றுக்கு முன்னேறினார். பென்னி மோர்டான்ட் 67, வாக்குகள் பெற்று இரண்டாவது இடத்திலும், லிஸ் டிரஸ் 50 வாக்குகள் பெற்று 3ம் இடத்திலும் உள்ளனர். இதனைத்தொடர்ந்து இன்று இரண்டாம் சுற்று தேர்தல் நடைபெறுகிறது. கடைசி இருவா் தேர்ந்தெடுக்கப்படும் வரை வாக்குப்பதிவு வாக்குப்பதிவு பல்வேறு சுற்றுகளாக நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.