அடுத்தடுத்த சக்திவாய்ந்த நிலநடுக்கம்.. தைவானுக்கு சுனாமி எச்சரிக்கை விடுத்த ஜப்பான்..

 
தைவானில் மீண்டும் சக்திவாய்ந்த நிலநடுக்கம்


தைவானில் மீண்டும் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்ட நிலையில், ஜப்பான் சுனாமி எச்சரிக்கை விடுத்திருக்கிறது.  

 தைவான் நாட்டின் கிழக்கு கடற்கரையில் உள்ளூர் நேரப்படி இரவு 9.30 மணியளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. அங்குள்ள கடலோர நகரமான டைட்டங்கிற்கு வடக்கே 50கி.மீ  தொலைவில் ,  10 கி.மீ  ஆழத்தில் இந்த நிலநடுக்கம் மையம் கொண்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டது.  இது ரிக்டர் அளவுகோலில் 6.6. அலகாக பதிவாகியிருந்தது. இந்த சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் கடலோர பகுதிகளில் உள்ள கட்டிடங்கள்,  வீடுகள் கடுமையாக குலுங்கின. இதனால் பீதியடைந்த பொதுமக்கள் உடனடியாக வீடுகளை விட்டு வெளியேறி சாலைகளில் தஞ்சம் அடைந்தனர்.  அதேநேரம்  இந்த நிலநடுக்கம் காரணமாக  உயிரிழப்புகள், காயங்கள் மற்றும்  பெரிய அளவில் சேதம் ஏதும் பதிவானதாக  தகவல் வெளியாகவில்லை.

தைவானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

இந்நிலையில், மீண்டும்  தைவானின் தென்கிழக்கு கடற்கரையில் இன்று பிற்பகல் 2.44 மணிக்கு 7.2 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.  தைடுங் நகருக்கு வடக்கே 50 கி.மீ தொலைவில்,  10 கிலோ மீட்டர் ஆழத்தில் இந்த  நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு  மையம் தெரிவித்திருக்கிறது.   இந்த நிலநடுக்கத்தின்  எதிரொலியால் தைவான் அருகே உள்ள தொலைதூர தீவுகளுக்கு ஜப்பான் வானிலை மையம் சுனாமி எச்சரிக்கை விடுத்துள்ளது.  அத்துடன்  இன்று மாலை 4 மணியளவில்  மீட்டர் அளவிற்கு உயரமான அலைகள் எழும்பலாம் என்றும் தெரிவித்து.   இந்த பயங்கர நிலநடுக்கம்  புஜியன், குவாங்டாங், ஜியாங்சு மற்றும் ஷாங்காய் உள்ளிட்ட கடலோரப் பகுதிகளிலும் தெளிவாக உணரப்பட்டதாக சீன நிலநடுக்க நெட்வொர்க் மையம் தெரிவித்தது.  


இந்த நில நடுக்கத்தால் பல இடங்களில் கட்டிடங்கள் இடிந்து விழுந்துள்ளன. தண்டவாளத்தில்  சென்று கொண்டிருந்த ரயில்கள் தடம்புரண்டு விபத்துக்குள்ளாகின.. மக்கள் அலறியடித்துக்கொண்டு சாலைகளில் தஞ்சம் புகுந்தனர். இரண்டாவதாக ஏற்பட்ட இந்த பயங்கர நிலநடுக்கத்தினால் பல இடங்களில் சேதம் ஏற்பட்டுள்ளது. ஆங்காங்கே மீட்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. முழுமையான சேர விவரங்கள் பின்னரே தெரியவரும்..