அடுத்தடுத்து 8 முறை ஏவுகனை தாக்குதல்.. உக்ரைனில் குழந்தைகள் உள்பட 23 பேர் பலி..

உக்ரைனில் ரஷ்யா மீண்டும் ஏவுகணை தாக்குதல் நடத்தியதில், குழந்தைகள் உள்பட 23 பேர் பலியாகியுள்ளனர்.
உக்ரைன் மீது ரஷியா கடந்த பிப்ரவரி மாதம் இறுதியில் தாக்குதைத் தொடங்கியது. போர் தொடங்கி 5 மாதங்களை கடந்துவிட்ட போதிலும், போர் இன்னும் முடிவுக்கு வந்ததாக தெரியவில்லை. ரஷியாவின் மும்முனை தாக்குதலுக்கு உக்ரைனின் பெரும்பாலான நகரங்கள் உருகுலைந்து போய்விட்டன. ஆனாலும் ரஷ்யாவுக்கு டஃப் கொடுக்கும் வகையில் உக்ரைன் வீரர்கள் அசராமல் எதிர்த்து போரிட்டு வருகின்றனர். இதனால் இன்னும் சில நகரங்களை பிடிக்க முடியாமல் ரஷியா திணறி வருகிறது. இந்தப்போரில் வீரர்கள், பொதுமக்கள் என இதுவரை பல்லாயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டுள்ளனர்.
இந்தநிலையில், நேற்று ரஷ்ய படைகள் உக்ரைன் தலைநகர் கிவ்வில் இருந்து 268 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள மத்திய பகுதியான வினிட்சியா நகரில் தாக்குதல் நடத்தின.. சரமாரியாக ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியதில், அங்குள்ள முக்கிய அரசு அலுவலக கட்டிடங்கள், அருகில் இருந்த குடியிருப்பு கட்டிடங்களும் கடுமையாக சேதம் அடைந்தன. இதில் கட்டிடங்கள் தீப்பிடித்து எரிந்து சேதமடைந்தன. இந்த தாக்குதலில் 3 குழந்தைகள் உள்பட 23 அப்பாவி பொதுமக்கள் பலியாகினர். மேலும் . 90-க்கும் மேற்பட்டவர்கள் படுகாயம் அடைந்துள்ளனர். அவர்களை காவல்துறையினர் மீட்டு மருத்துமனைகளில் அனுமதித்தது.
தாக்குதலில் சிக்கி காயமடைந்தவர்களில் பலர் கவலைக்கிடமான நிலையில் இருப்பதாக கூறப்படுகிறது. அடுத்தடுத்து 8 முறை நடத்தப்பட்ட ஏவுகணை தாக்குதலில் 50-க்கும் மேற்பட்ட கார்கள் மற்றும் வாகனங்கள் தீயில் கருகி நாசமாகின. அதேபோல் நேற்று முன்தினம் நடைபெற்ற சண்டையில் 5 பேர் உயிரிழந்தனர். ரஷியாவின் இந்த தாக்குதலுக்கு உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி கடும் கண்டனம் தெரிவித்திருக்கிறார். வேண்டுமென்றே பொதுமக்கள் மீது குறிவைத்து இந்த ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகவும் அவர் குற்றம் சாட்டியிருக்கிறார்.