பள்ளி வேன் - லாரி நேருக்கு நேர் மோதி விபத்து.. - 21 பேர் பலி..
தென்ஆப்பிரிக்காவில் பள்ளி வேன்-லாரி நேருக்கு நேர் மோதிய விபத்தில் 19 சிறுவர்கள் உள்பட 21 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
தென்ஆப்பிரிக்காவின் கிழக்கு பகுதியில் அமைந்துள்ள குவாஸ்லு-நடால் மாகாணத்தின் பொங்கோலா நகரில் தனியார் தொடக்க பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. நேற்று முன்தினம் மதியம் பள்ளிக்கூடத்தில் வகுப்புகள் முடிந்ததும் மாணவர்கள் பள்ளி வேனில் வீட்டிற்கு புறப்பட்டுள்ளனர். அந்த வேனில் 5 முதல் 12 வயதுக்கு உட்பட்ட 19 சிறுவர்கள், ஓட்டுநர் மற்றும் உதவியாளர் என மொத்தம் 21 பேர் பயணித்துள்ளனர்.
இந்த நிலையில் பொங்கோலா நகரில் உள்ள நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தபோது, எதிர் திசையில் அதிவேகத்தில் வந்த சரக்கு லாரி பள்ளி வாகனத்தின் மீது நேருக்கு நேர் மோதியது. இதில் பள்ளி வேன் முழுவதுமாக அப்பளம் போல் நொறுங்கியது. இந்த கோர விபத்தில் வேனில் இருந்த 19 சிறுவர்கள், டிரைவர் மற்றும் உதவியாளர் என 21 பேரும் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த விபத்து குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.