உலக ஜூனியர் பேட்மிண்டன் போட்டி ரத்து – கொரோனா அச்சம்
கொரோனாவின் தாக்கம் எல்லா மட்டங்களிலும் நீக்கமற பரவியிருக்கிறது. குறிப்பாக, விளையாட்டுத் துறையில் பல வீரர்கள் முறையாகப் பயிற்சி எடுக்கக்கூட முடியவில்லை. வழக்கமாக இந்த ஆண்டில் ஒலிம்பிக் போட்டிகள் நடத்தப்பட்டிருக்க வேண்டும். ஆனால், உலகம் முழுவதும் சுழற்றி அடித்து வரும் கொரோனா பரவல் காரணமாக, 2021 ஆம் ஆண்டுக்கு ஒலிம்பிக் திருவிழா ஒத்திவைக்கப்பட்டது.
இந்த ஆண்டு உலக ஜூனியர் பேட்மிண்டன் போட்டி நியூசிலாந்து நாட்டில் நடக்கிறது. வழக்கமாக நடக்கும் தேதிகளில் நடத்த முடியாமல் போனதற்கு கொரோனாவே காரணம். ஒருவழியாக ஜனவரிக்கு ஒத்தி வைக்கப்பட்டது. அதற்குள் கொரோனா கட்டுக்குள் வந்துவிடும் எனக் கருதப்பட்டது. ஆனாலும் பல நாடுகளில் கொரோனா இரண்டாம் அலை வீசத் தொடங்கியிருக்கிறது. இந்த நிலையில் போட்டி நடத்துவதில் உள்ள ஆபத்துகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.
இன்றைய தேதியில் நியூசிலாந்தில் கொரோனாவின் மொத்த பாதிப்பு 1923. இவர்களில் 1832 பேர் குணமடைந்துவிட்டனர். 25 பேர் இறந்துவிட்டனர்.
மற்ற நாடுகளைக் காட்டிலும் நியூசிலாந்தில் கொரோனா தாக்கம் குறைவுதான் என்றாலும் வீரர்களின் பாதுகாப்பு கருதி உலக ஜூனியர் பேட்மிண்டன் போட்டி ரத்து செய்யப்பட்டிருக்கிறது.