மலையில் இருந்து குதித்து தாய், மகள் தற்கொலை… தந்தை இறந்த சோகத்தில் விபரீதம்…

 

மலையில் இருந்து குதித்து தாய், மகள் தற்கொலை… தந்தை இறந்த சோகத்தில் விபரீதம்…

தென்காசி

தென்காசி அருகே தந்தை இறந்த வேதனையில், தனது 7 வயது மகளுடன் இளம்பெண், மலையில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார்.

தென்காசி மாவட்டம் கடையம் அடுத்துள்ள பால்வண்ணநாதபுரத்தை சேர்ந்தவர் தேவபுத்திரன். இவரது மனைவி லட்சுமிதேவி (30). இவர்களுக்கு 2 மகள்கள் மற்றும் ஒரு மகன் உள்ளனர். இதனிடையே, கடந்த 4 மாதங்களுக்கு முன்பு லட்சுமி தேவியின் தந்தை பூவையா உயிரிழந்துள்ளார்.

தந்தை இறந்ததால் மனமுடைந்த நிலையில் காணப்பட்ட அவர், நேரம் சரியில்லை என கூறி, கடந்த ஒரு மாதமாக கானவூரில் குடும்பத்துடன் வசித்து வந்தார். இந்த நிலையில், கடந்த செவ்வாய் கிழமை அன்று தோரணமலை முருகன் கோவில் செல்வதாக கூறி, தனது 2-வது மகள் மனிஷாவை அழைத்து கொணடு லட்சுமிதேவி சென்றார்.

மலையில் இருந்து குதித்து தாய், மகள் தற்கொலை… தந்தை இறந்த சோகத்தில் விபரீதம்…

ஆனால் இரவாகியும் இருவரும் வீடு திரும்பாததால் அதிர்ச்சி அடைந்த உறவினர்கள், பல்வேறு இடங்களில் தேடிப் பர்த்தனர். இந்த நிலையில், நேற்று தோரணமலையில் சுமார் 800 அடி பள்ளத்தில் இருவரது சடலமும் கிடப்பதை பார்த்த உறவினர்கள், இது குறித்து கடையம் போலீசாருக்கு தகவல் அளித்தனர்.

சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மற்றும் தென்காசி தீயணைப்பு நிலைய வீரர்கள், மலையில் கிடந்த இருவரது உடல்களையும் மீட்டு நெல்லை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்து லட்சுமிதேவி சகோதரர் கண்ணன் புகாரின் பேரில் கடையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.