குடியாத்தம் அருகே பெண் தீக்குளித்து தற்கொலை… கணவரிடம் தீவிர விசாரணை!

 

குடியாத்தம் அருகே பெண் தீக்குளித்து தற்கொலை… கணவரிடம் தீவிர விசாரணை!

வேலூர்

குடியாத்தம் அருகே குடும்ப தகராறில் பெண் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் குறித்து, கணவரிடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே உள்ள லிங்குன்றம் ஜாப்ராபேட்டையை சேர்ந்தவர் விஜயன்(40). கட்டிட தொழிலாளி. இவரது மனைவி பிரியா(38). இவர்களுக்கு மோகன் குமார்(16) என்ற மகனும், மாதவி(10) என்ற மகளும் உள்ளனர். விஜயனுக்கு மது அருந்தும் பழக்கம் இருந்து வந்துள்ளது. இதனை கைவிடும்படி பிரியா பலமுறை வலியுறுத்தியும் அவர் கேட்கவில்லை. இந்த நிலையில், நேற்று முன்தினம் இரவு கணவன் – மனைவி இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டு உள்ளது.

இதனை தொடர்ந்து, இரவு 10.30 மணியளவில் அவர்களது வீட்டின் அருகே பிரியா எரிந்த நிலையில் சடலமாக கிடந்துள்ளார். ஆனால், இது அவரது குழந்தைகளுக்கு தெரியவில்லை என கூறப்படுகிறது. பிரியா எரிந்த நிலையில் கிடப்பதை கண்ட அக்கம் பக்கத்தினர், ஆற்காடு அடுத்த தாஜ்புரா பகுதியில் உள்ள பிரியாவின் பெற்றோருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில், பிரியாவின் சகோதரர் சுரேஷ், குடியாத்தம் நகர காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தார்.

குடியாத்தம் அருகே பெண் தீக்குளித்து தற்கொலை… கணவரிடம் தீவிர விசாரணை!

அதனை தொடர்ந்து, நேற்று அதிகாலை 4 மணியளவில் குடியாத்தம் டிஎஸ்பி ராமமூர்த்தி தலைமையிலான போலீசார், சம்பவ இடத்திற்கு சென்று பிரியாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து, இந்த சம்பவம் குறித்து குடியாத்தம் நகர போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

முதற்கட்ட விசாரணையில், பிரியா தனக்கு தானே மண்ணெண்ணையை ஊற்றிக்கொண்டு தீக்குளித்ததாக அக்கம் பக்கத்தினர் தெரிவித்துள்ளனர். எனினும், இந்த சம்பவம் தொடர்பாக பிரியாவின் கணவர் விஜயனை பிடித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். குடும்ப தகராறில் பெண் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.