சிறுமி நரபலி வழக்கு: பெண் மந்திரவாதி கைது!

 

சிறுமி நரபலி வழக்கு: பெண் மந்திரவாதி கைது!

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை அருகே உள்ளது நொடியூர் கிராமம். இப்பகுதியை சேர்ந்த பன்னீர் செல்வம் என்பவரின் மகள் வித்யா என்ற 13 வயது சிறுமி கடந்த மாதம் 18 ஆம் தேதி குடிநீர் எடுத்து வர சென்றுள்ளார். ஆனால் அவர் நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை . இதனால் பதறிபோன அச்சிறுமியின் தாய் சிறுமியை பல இடங்களும் தேடியுள்ளனர். இறுதியில் சிறுமி அங்குள்ள தைல மரக்காட்டில் உடலில் காயங்களுடன் மயக்க நிலையில் கிடந்துள்ளார். இதையடுத்து சிறுமி உடனடியாக மீட்கப்பட்டு தஞ்சை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சிறுமி பரிதாபமாக பலியானார். இந்த விவகாரத்தில் சிறுமி பாலியல் தொந்தரவுக்கு உட்படுத்தப்பட்டு இருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வந்தக் போலீசார் நான்கு தனிப்படை அமைத்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

ஆனால் சிறுமி கொல்லப்பட்ட வழக்கில் திடீர் திருப்பமாக சிறுமியை நரபலி கொடுத்தால் சொத்துக்கள் பெருகும் என்று பெண் மந்திரவாதி பேச்சை கேட்டு தனது 13 வயது மகளை தந்தையே கழுத்தை நெரித்து கொலை செய்தது விசாரணையில் அம்பலமானது.

இந்த வழக்கில் தந்தை, உறவினர் குமாரை  கைது செய்த விசாரணை நடத்தி வரும் போலீசார் தலைமறைவான மந்திரவாதியை தேடி வந்தனர்.

இந்நிலையில் சிறுமி நரபலி கொடுக்கப்பட்ட வழக்கில் பெண் மந்திரவாதி வசந்தி மற்றும் சிறுமியின் உறவினர் முருகாயி கைது செய்யப்பட்டனர். இவர்களிடம் போலீசார் தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதி மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.