பழனி எல்லையில் குடைகளுடன் காத்திருந்த மதுப்பிரியர்கள்!

 

பழனி எல்லையில் குடைகளுடன் காத்திருந்த மதுப்பிரியர்கள்!

திண்டுக்கல்

பழனி எல்லையில் உள்ள மதுபான கடைகளில் சமூக இடைவெளியை கடைபிடிக்கும் வகையில் குடிமகன்கள் குடையுடன் குவிந்தனர்.

தமிழ்நாட்டில் கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்த 1 மாதத்திற்கும் மேலாக மூடப்பட்டிருந்த டாஸ்மாக் கடைகள், தொற்று அதிகமுள்ள 11 மாவட்டங்கள் நீங்கலாக மற்ற மாவட்டங்களில் நேற்று முதல் திறக்கப்பட்டு உள்ளது. இதனால் நீண்ட நாட்களாக மது கிடைக்காமல் அவதிபட்டு வந்த மதுப்பிரியர்கள், காலை முதலே காத்திருந்து மதுவை வாங்கி சென்றனர்.

திருப்பூர், கோவை மாவட்டங்களில் மதுக்கடைகள் திறக்கப்படாததால், திண்டுக்கல் மாவட்ட எல்லையான பழனியை அடுத்த சாமிநாதபுரம் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையில் ஏராளமானோர் சென்று மதுவாங்கி சென்றனர். குறிப்பாக, மடத்துக்குளம், உடுமலை, கோவை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ஏராளமானோர் குவிந்ததால், சாமிநாதபுரம் மதுக்கடையில் கூட்டத்தை கட்டுப்படுத்த கூடுதலாக போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

பழனி எல்லையில் குடைகளுடன் காத்திருந்த மதுப்பிரியர்கள்!

இதனிடையே, வெளியூர் நபர்கள் அதிகளவில் மதுபாட்டில்களை வாங்கி சென்றதால், உள்ளூர் நபர்களுக்கு மது கிடைக்கவில்லை என அந்த பகுதி வாசிகள் புகார் தெரிவித்திருந்தனர். இதனால், உள்ளூர் வாசிகளுக்கு மது கிடைக்கும் விதமாக, மதுவாங்க வருபவர்களுக்கு ஆதார் அவசியமாக்கபட்டது. அதன்படி, ஆதாரில் உள்ளூர் முகவரி உள்ளவர்களுக்கு மட்டுமே கடைக்குள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.

அத்துடன், சமூக இடைவெளியை கடைபிடிக்கும் பொருட்டு குடை பிடித்தபடி வரிசையில் நிற்பவர்களுக்கு மட்டுமே மதுபாட்டில்களை விற்பனை செய்யும் படி டாஸ்மாக் கடை ஊழியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது. இதனால் சாமிநாதபுரம் டாஸ்மாக் கடையில் ஏராளமான மதுப் பிரியர்கள் குடைகளுடன் நீண்ட வரிசையில் காத்திருந்து வருகின்றனர்.