’’5ம் தேதி பள்ளிகள் திறப்பா? எனக்கு எந்த தகவலும் வரவில்லை; வந்தால் தெரிவிக்கிறேன்’’ -அமைச்சர் செங்கோட்டையன்
அரசு பள்ளியில் மாணவர்களை சேர்க்க பெற்றோர்கள் ஆர்வமாக உள்ளனர். 13 லட்சத்து 84 ஆயிரம் பேர் இது வரை புதிதாக அரசு பள்ளியில் சேர்த்துள்ளனர் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கோபிசெட்டிபாளையத்தில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
அதனைத் தொடர்ந்து, ஈரோடு மாவட்டம் கோபி செட்டிபாளையம் சட்ட மன்ற தொகுதியில் பட்டா, முதியோர் உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகளையும் கொரோனா தடுப்பு பணியில் சிறப்பாக செயல்பட்ட வருவாய்துறை ஊழியர்கள் மற்றும் நகராட்சி பணியாளர்களுக்கு நற்சான்றிதழ்கள் வழங்கும் விழா மாவட்ட ஆட்சியர் கதிரவன் தலைமையில் நடைபெற்றது. இதில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கலந்து கொண்டு பாராட்டு சான்றிதழ்களை வழங்கியும் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளையும் வழங்கினர். அதனை தொடர்ந்து ஒவ்வொரு ஊராட்சி வாரியாக ஊராட்சிகளில் உள்ள குறைகளை கேட்டறிந்து அவர்களிடமிருந்து மனுக்கான பெற்று அந்தந்த துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி பொதுமக்களின் கோரிக்கையை நிறைவேற்றும் வண்ணம் உடனடி நடவடிக்கையாக மனுக்கள் மீது ஆய்வு மேற்கொண்டார்.
அதனை தொடர்ந்து நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பின் போது, ’’அரசு பள்ளியில் மாணவர்களை சேர்க்க பெற்றோர்கள் ஆர்வமாக உள்ளனர். 13 லட்சத்து 84 ஆயிரம் பேர் இது வரை புதிதாக அரசு பள்ளியில் சேர்த்துள்ளனர். செப்டம்பர் இறுதி வரை மாணவர் சேர்க்கை நடைபெறும். நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்பது தான் அரசின் கொள்கை. இந்த ஆண்டு 238 மையங்களில் 1.17,990 மாணவர்கள் நீட் தேர்வை எழுதவுள்ளனர். வரும் 5 தேதி
பள்ளிகள் திறப்பது குறித்து எனக்கு எந்த தகவலும் வரவில்லை வந்தால் தகவல் தெரிவிக்கிறேன். நீட் தேர்வு அச்சத்தால் தற்கொலை செய்து கொண்ட மாணவர்களின் குடும்பங்களுக்கு அரசு உதவி செய்துள்ளது’’ என்றார்.
இவ்விழாவில் மாவட்ட வருவாய் அலுவலர் கவிதா கோட்டாட்சியர் ஜெயராமன் தாசில்தார் சிவசங்கர் மற்றும் அனைத்துத்துறை அலுவலர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.