கணவர் இறந்த வேதனையில், கால்வாயில் குதித்து பெண் தற்கொலை!
கோவை
சூலூர் அருகே கணவர் உயிரிழந்ததால் வேதனையில் மனைவி கால்வாயில் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
கோவை மாவட்டம் சூலூர் அருகே உள்ள எஸ். அய்யம்பாளையம் பகுதியை ஈஸ்வரன். கூலி தொழிலாளி. இவரது மனைவி அருக்காத்தாள் (65). ஆஸ்துமா நோயால் பாதிக்கப்பட்டிருந்த ஈஸ்வரன், கடந்த 4ஆம் தேதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். கணவர் மீது அதிக அன்பு கொண்டிருந்த அருக்காத்தாள், அவரது மறைவால் மனமுடைந்து காணப்பட்டு வந்துள்ளார்.
இதனால் வாழ்வில் விரக்தியடைந்த அவர், நேற்று மலைப்பாளையம் பகுதியில் உள்ள பி.ஏ.பி கால்வாயில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். தகவல் அறிந்த சுல்தான்பேட்டை காவல் நிலைய போலீசார், சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பல்லடம் அரசு மருத்துவனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், இந்த சம்பவம் குறித்து அருக்காத்தாளின் மகன் கார்த்திகேயன் அளித்த புகாரின் பேரில், சுல்தான்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கணவர் இறந்த வேதனையில் மனைவி கால்வாயில் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் உறவினர்கள் மற்றும் கிராமத்தினர் இடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.