நல்லக்கண்ணு ஏன் தமிழ்நாட்டில் முதல் அமைச்சராக முடியவில்லை! #HBD_Nallakkannu

 

நல்லக்கண்ணு ஏன் தமிழ்நாட்டில் முதல் அமைச்சராக முடியவில்லை! #HBD_Nallakkannu

இந்தியா சுதந்திரம் அடைந்த அடுத்த வருடம். இந்தியா முழுமைக்கும் கம்யூனிஸ்ட் கட்சி தடை செய்யப்பட்ட காலம். அப்போது கட்சியின் முக்கிய தலைவரான நல்லக்கண்ணுவும் தலைமறைவாக இருந்தார். காட்டுப் பகுதியில் ஒளிந்திருந்த நல்லக்கண்ணுவை மாறுவேடத்தில் சென்ற காவல் துறை பிடித்தது. அவரின் மீசையில் சுருட்டை வைத்து பொசுக்கியும், ஒவ்வொரு முடியாகப் பிடுங்கியும் மற்ற தலைவர்கள் எங்கே என நிஜ ‘விசாரணை’ நடத்தியது காவல் துறை. ஆனால், நல்லக்கண்ணுவிடமிருந்து ஒரு வார்த்தையும் பிடுங்க முடியவில்லை அவர்களால். ஏழாண்டுகள் சிறை வாசம் அனுபவித்தார் நல்லக்கண்ணு.

தமிழகத்தில் அரசியல் கொள்கைகள் மாறுபட்டவர்கள் இருப்பார்கள். ஆனால், ஒருவர் கூட நல்லக்கண்ணுவை ஏற்காதவர் இருக்கமாட்டார்கள். அந்தளவுக்கு தமிழகத்தின் அடித்தட்டு மக்களுக்கு எவ்வித எதிர்பார்ப்பும் இல்லாமல் அர்ப்பணிப்பு உணர்வோடு களம் கண்டவர் நல்லக்கண்ணு.

நல்லக்கண்ணு ஏன் தமிழ்நாட்டில் முதல் அமைச்சராக முடியவில்லை! #HBD_Nallakkannu

அதெல்லாம் சரி, நல்லக்கண்ணு ஏன் தமிழ்நாட்டில் முதலமைச்சராக முடியவில்லை?

அதற்கு முன் அவரைப் பற்றிச் சுருக்கமாகத் தெரிந்துகொள்வோம். சைவம் சாப்பிடும் பழக்கம் உள்ள வீட்டில் பிறந்த நல்லக்கண்ணு கம்யூனிஸ்ட் கட்சியில் சேர்ந்தபிறகு, அவரின் வாழ்க்கை முறையே மாறி போகிறது. நாங்குனேரியில் உள்ள புகழ்பெற்ற கோவிலுக்குள் தாழ்த்தப்பட்ட மக்களை உள்ளே சென்று வழிபடும் உரிமை மறுக்கப்பட்டது. அதை எதிர்த்து பெரும் போராட்டத்தை முன்னெடுத்தார் நல்லக்கண்ணு. அதேபோல, தென் மாவட்டங்களில் பல ஊர்களில் தங்கள் வீடுகளில் நிலைவாசல் வைத்துக்கட்டுவதற்கு ஆதிக்க சாதியினர் எதிர்ப்பு தெரிவித்தனர். மீறி அப்படி வீட்ட்டில் நிலை வாசல் வைத்து கட்டினால் இடிக்க வந்துவிடுவார்கள். இந்த இழிநிலைக்கு எதிராகப் போராடி நிலை வாசல் வைத்து வீடு கட்ட உரிமை போராட்டம் நடத்தியவர்.

தென் மாவட்டங்களில் நடந்த பல சாதிக் கலவரங்களில் பாதிக்கப்பட்ட மக்களின் பக்கம் நின்று துயர் துடைக்க ஓடோடி சென்றவர். குற்றாலம் அருகே குதிரைப் பந்தயம் மைதானம் கட்டவிருந்த அரசின் திட்டத்தை தம் போராட்டத்தால் தடுத்து நிறுத்தியவர். அப்படி நல்லக்கண்ணு போராடியிருக்கா விட்டால் இந்நேரம் குற்றாலத்தின் இயற்கை அழகு சீர்க்கெட்டு போயிருக்கும். மேலும் அந்த அருவியும் தனியாருக்கு தாரை வார்க்கப்பட்டிருக்கலாம்.

நல்லக்கண்ணு ஏன் தமிழ்நாட்டில் முதல் அமைச்சராக முடியவில்லை! #HBD_Nallakkannu

இதெல்லாம் நல்லக்கண்ணு வாலிப வயதில் செய்திருக்கலாம் எனச் சிலர் நினைக்கலாம். அவரின் 80 வயதில்கூட ஆற்றில் மண் எடுப்பதற்கு எதிராகவும், தாமிரபரணியில் நீர் எடுக்கும் குளிர்பான நிறுவனத்திற்கு எதிராகவும் நல்லக்கண்ணு களத்தில் இறங்கி போராடியிருக்கிறார்.

தனது 80-வது வயதில் கட்சி இவருக்கு கொடுத்த ஒரு கோடி ரூபாய் பணத்தை கட்சியின் வளர்ச்சிக்கே திருப்பி அளித்தார். இப்போது வரை சென்னையில் வசதி குறைவான வாடகை வீட்டில்தான் வசித்து வருகிறார்.

மீண்டும் அந்தக் கேள்வி… நல்லக்கண்ணு ஏன் தமிழ்நாட்டில் முதலமைச்சராக முடியவில்லை?

இத்தனை மகத்தான அரசியல் பணிகளைச் செய்த நல்லக்கண்ணு மூன்று முறை தேர்தலில் நின்றார். இரு முறை சட்டமன்றத்திற்கு. ஒருமுறை பாராளுமன்றத்திற்கு. மூன்றிலுமே தோல்வியை அளித்தார்கள் தமிழக மக்கள். அதிலும் பாராளுமன்ற தேர்தலில் அவரைத் தோற்கடித்தது பாரதிய ஜனதா கட்சி வேட்பாளர்.

நல்லக்கண்ணு ஏன் தமிழ்நாட்டில் முதல் அமைச்சராக முடியவில்லை! #HBD_Nallakkannu

நல்லக்கண்ணுவால் தேர்தல் வெற்றிக்காக கொள்கையில் செயற்பாட்டில் சமரசம் செய்துகொள்ள தெரியாது. அதனால், அவரால் தமிழ்நாட்டின் முதல்வராக ஆக முடியவில்லை.

இவை தவிரவும் தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியின் செல்வாக்கு மிகுந்திருந்தபோது கம்யூனிஸ்ட்டுகளுக்கும் செல்வாக்கு இருந்தது. பிறகு திராவிட கட்சிகளின் வரவும் இரு துருவ அரசியல் போக்கும் மற்றவர்கள் முன்னிலை பெற முடியாமல் போனது. மதவாத சக்திகள் மேலெழுந்து வரும் நிலையில் இடதுசாரிகளும் (நல்லக்கண்ணு உட்பட) மதவாத சக்தி வெல்லாமல் இருக்க என்ன செய்யலாம் என்ற முடிவுக்கு வந்துவிட்டனர். எனவே, நல்லக்கண்ணு முதல்வராக முடியவில்லை.

இன்று நல்லக்கண்ணுவின் 96-வது பிறந்த நாள். இன்றும் அவர் இந்தச் சமூகத்திற்கான பணிகளைச் செய்துகொண்டுதான் இருக்கிறார். அவருக்கு எந்தப் பதவி மீதும் ஆசையில்லை. ஆனால், அவரை ஒரு சட்டமன்ற உறுப்பினராகக்கூட ஆக்க வில்லை என்று குற்றவுணர்வு கொள்ள வேண்டியது தமிழக வாக்காளர்களே.