காவல்துறையை கேவலப்படுத்தி, அவமானப்படுத்தி, அவதூறு செய்வது ஏன்? காங்கிரசுக்கு பாஜக கேள்வி
முழுக்க முழுக்க காவல்துறை பின்புலம் உள்ள ஆர்.என்.ரவியை தமிழக ஆளுநராக நியமித்ததில் உள்நோக்கம் இருப்பதாக சந்தேகம் எழுந்துள்ளது என்றும் முன்னாள் காவல்துறை அதிகாரியான கிரண்பேடியை புதுச்சேரி ஆளுநராக நியமித்து மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு எதிராக நடத்திய ஜனநாயக விரோத நடவடிக்கைகளை நாடே பார்த்து நகைத்தது என்றும், பயங்கரவாத குழுக்களை ஒடுக்குவதற்காகவே, பொறுப்புகள் வழங்கப்பட்டு செயல்பட்ட ஆர். என். ரவியை தமிழகத்தில் நியமித்து ஜனநாயக படுகொலை நடத்துவதற்கு ஆயுதமாக மோடி அரசு பயன்படுத்த முயன்றால், போராட வேண்டிய சூழல் உருவாகும் என்றிருக்கிறார் தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ். அழகிரி என்று குறிப்பிட்டிருக்கும் தமிழக பாஜக செய்தி தொடர்பாளர் நாராயணன் திருப்பதி,
அவர் மேலும் தனது அறிக்கையில், காவல் துறை பின் புலம் உள்ள ஒருவர் ஆளுநராக நியமிக்கப்பட்டால் உள்நோக்கம் இருக்கும் என காங்கிரஸ் சந்தேகப்படும் அளவிற்கு தமிழகத்தில் சட்ட விரோதமாக நடைபெறுவது என்ன என்பதை கே எஸ் அழகிரி விளக்க வேண்டும். அல்லது காவல்துறையினர், ஆளுநராவது களங்கமா அல்லது சட்ட விரோதமா என்பதை தெளிவுபடுத்த வேண்டும் என்ற கேள்வியை எழுப்பி இருக்கிறார்.
காவல்துறை, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு எதிராக நடக்கும் என்று 50 ஆண்டுகளுக்கும் மேலாக மத்திய அரசிலும், பெரும்பாலான மாநிலங்களிலும் ஆட்சியில் இருந்த காங்கிரஸ் கட்சி கூறுகிறதா?காங்கிரஸ் கட்சி 50 ஆண்டுகள் ஜனநாயக படுகொலையை காவல்துறை உதவியுடன் செய்ததாக ஒப்புதல் வாக்குமூலம் அளிக்கிறாரா கே .எஸ் அழகிரி. ? மேலும்,பயங்கரவாத குழுக்களை ஒடுக்குவது என்பது நாட்டின், நாட்டு மக்களின் பாதுகாப்பு கருதி தானே?ஆனால், அப்படி பயங்கரவாதிகளை ஒடுக்கியவருக்கு பொறுப்பு கொடுத்தால் போராடுவேன் என்று சொல்வது தேச துரோகம் அல்லவா? ஜனநாயகத்திற்கு எதிரானது இல்லையா?
தேச விரோத சிந்தனையில்லையா? பயங்கரவாதத்திற்கு துணை போகும் செயலை தமிழக காங்கிரஸ் தலைவர் செய்வது ஏன்?உள்நாட்டு பாதுகாப்பை உறுதி செய்து,பொதுமக்களை காப்பாற்றும் காவல்துறையை கேவலப்படுத்தி அவமானபடுத்தி, அவதூறு செய்வது ஏன்? காவல்துறை குறித்து அவதூறு விமர்சனம் செய்து,பொது மக்களிடையே நம்பிக்கையை இழக்க செய்யும் வகையில் விமர்சனம் செய்துள்ள தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் கே. எஸ். அழகிரி மீது தமிழக அரசு மற்றும் தமிழக காவல்துறை உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி இருக்கிறார்.