பள்ளிகள் எப்போது திறக்கப்படும்? அரசு பதில் அளிக்க உத்தரவு
தமிழகத்தில் பள்ளிகள் எப்போது திறக்கப்படும் என்பது குறித்து அரசு பதில் அளிக்க வேண்டும் என ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
கொரோனா அச்சுறுத்தலால் கடந்த மார்ச் மாதம் மூடப்பட்ட பள்ளிகள் இன்னும் திறக்கப்படவில்லை. பொதுத் தேர்வு எழுதப்போகும் மாணவர்களின் நிலையை கருத்தில் கொண்டு, 9 முதல் 12ம் வகுப்பு வரை பள்ளிகளை திறக்க அரசு நடவடிக்கை எடுத்தது. ஆனால் அதற்கு கடும் எதிர்ப்புகள் கிளம்பியதால், அரசின் அரசாணை நிறுத்தி வைக்கப்பட்டது. இதனிடையே மாணவர்களின் பாடத்திட்டங்கள் குறைக்கப்பட்டு, ஆன்லைன் வகுப்புகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில் பள்ளிகள் திறப்பு தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த ஆண்டு இறுதிக்குள் பள்ளிகளை திறக்க வாய்ப்பு இருக்கிறதா என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். தொடர்ந்து, பள்ளிகள் எப்போது திறக்கப்படும் என்பது குறித்து நவம்பர் 11ம் தேதி பதிலளிக்க வேண்டும் என அரசுக்கு உத்தரவு பிறப்பித்தனர்.
மேலும், நீதிமன்ற அவமதிப்புக்கு உள்ளான 9 பள்ளிகள் தங்களின் நிலைப்பாட்டை தெரிவிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளனர்.